கொடி மாட செங்குன்றம், நாகாசலம், மேருமலை, அரவக்கிரி, வாயுக்கிரி ஆகிய பெயர்களைக் கொண்ட மலை. ஒவ்வொரு திசையிலிருந்து பார்க்கும்போது வெவ்வேறு விதமாக காட்சி அளிக்கும் மலை.
திருச்செங்கோட்டின் பெரிய மலைமுகட்டிற்கு நாகமலை என்றும், சிறிய மலைமுகட்டிற்கு நந்திமலை என்றும் பெயர். இதனிடையே நாகர் பள்ளம் காணலாம்.
வாயு தேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையே யார் பலசாலி? என்ற சர்ச்சை எழுந்து அதுவே பெரும் போட்டியாக உருவெடுத்தது.
போட்டியின்படி - இமயமலை சிகரம் ஒன்றை ஆதிசேஷன் சுற்றிக் கொள்ள வேண்டும். வாயு தேவன் அதை அங்கிருந்து பெயர்த்து எடுக்க வேண்டும். தேவர்களின் வேண்டுதலின்படி ஆதிசேஷன் சிறிது பிடியை தளர்த்த, அந்த இடைவெளியில் புகுந்த வாயு மலையை பெயர்த்து வேகமாக கொண்டு வந்து தற்போதுள்ள இடத்தில் வைத்து விட்டான். இந்த நிகழ்வின்போது ஆதிசேஷனின் முடியில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. ரத்தம் தோய்ந்த மலை என்பதால் செங்கோடு எனப் பெயர் கொண்டது.
சிவபெருமானிடமிருந்து வரங்களாகப் பெற்ற ஐந்து குன்றுகளில் ஒன்றினை காமதேனுப் பசுவும் நிறுவியது. ஆதிசேஷனின் ரத்தம் தோய்ந்த செந்நிறக் குன்றும், காமதேனு ஸ்தாபித்தக் குன்றுமாக சேர்ந்து பின்னிப் பிணைந்து, இருதலைப் பாம்பு படம் விரித்தாற்போல, செங்கோடாக தெரிகின்றது. சிவ - பார்வதி ஐக்கியத்தை வெளிப்படுத்தும் விதத்தில் தோற்றமளிக்கும் இக்குன்றின் மலைக் கற்கள் மஞ்சள் நிறமும், சிவப்பு நிறமும் கொண்டிருக்கின்றன.
சிவனை மட்டுமே வணங்குவேன் - சக்தியை வணங்க மாட்டேன் என்ற பிடிவாதத்திலிருந்த ப்ருங்கி மகரிஷிக்கு சக்தியும் சிவனும் ஒன்றே என அறிவுறுத்திய ஸ்தலம்.
சக்திக்கு தனது திருமேனியில் பாதியைத் தந்து உமையொரு பாகனாக மாறி நின்றார் இறைவன். இவரே அர்த்தநாரீஸ்வரர். அர்த்தம் (பாதி), நாரீ (பெண்)
புரட்டாசி வளர்பிறை தசமியில் தொடங்கி, ஐப்பசி கிருஷ்ணபட்ச சதுர்த்தி நாள் வரை பார்வதி தேவி கேதாரகௌரி விரதமிருந்து இறைவனின் வாமபாகத்தைப் பெற்றாள். அப்பனிடமிருந்து பிரிக்க முடியாத வகையில் அர்த்தநாரீஸ்வரர் திருவுருவில் ஐக்கியமானாள்.
பழத்தின் காரணமாக கோபித்துக் கொண்டு பழநி சென்ற முருகன், அங்கிருந்து கயிலாயம் தெரிந்ததால் இங்கு வந்து நின்றதாக கூறப்படுகிறது.
அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான விறன் மீண்ட நாயனார் அவதரித்த ஸ்தலம். மறைகள் பூஜித்த ஸ்தலம்.
அம்மையப்பனுக்கு அர்ச்சனை செய்யும்போது ஒரு நாமம் சிவநாமமாகவும், ஒரு நாமம் அம்பிகையின் நாமமாகவும் மாறி மாறி சொல்லி அர்ச்சிக்கின்றனர். (காலை 6-7, மதியம் 12-1, மாலை 4-5 மணி )
புது மணத் தம்பதிகள் அம்மையப்பன் முன்பாக மாலை மாற்றிக் கொண்டால் இணை பிரியாது ஒற்றுமையாக இருப்பார்கள் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் இங்கு நிறைய திருமணங்கள் நடப்பதாக கூறப்படுகிறது.
நாக தோஷங்களிலிருந்து விடுபட பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. சதய நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார ஸ்தலம். நீலகண்ட பதிகம் பாடி வழிபடுவோர்க்கு நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கின்றது.
தேவாரத்திருத்தலம்