பெரிய மலைப்பாறையில் 7.5 மீட்டர் (30 அடி) ஆழத்திற்கு சதுரமாக வெட்டி எடுத்து, அதன் நடுப்புறத்தை கோவிலாக செதுக்கியுள்ளனர். மேல் பகுதி முழுமையாக கட்டப்பட்டும், கீழ் பகுதி முற்றுப் பெறாமலும் இருக்கின்றன. மலை உச்சிக்கு செல்லும் பாதை சிறு சிறு படிகளாக வெட்டப்பட்டுள்ளது. அடிவாரத்தில் பூங்கா ஒன்றும் உள்ளது. குடைவரைக் கோவிலாக சிவாலயம் ஒன்று குடையப்பட்டுள்ளது. தற்போது விநாயகர் எழுந்தருளியுள்ளார். எட்டுப்பட்டைகளுடைய விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்தியும், கீழே யாளியும் செதுக்கியுள்ளனர். விமானத்தின் மேலே நரசிம்மரும் வடக்கே பிரம்மனும் காணப்படுகின்றனர். அம்மையப்பர் திருவுருவம், தேவர்கள், கந்தர்வர்கள், பூத கணங்கள் என அனைத்து சிற்பங்களும் பிரம்மிப்பை தருகின்றன. கோஷ்டத்தில் காணப்படும் தட்சிணாமூர்த்தியின் திருவுருவத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அத்தனை அழகு. ஜடாமுடியுடனும், குழையும் தோடும் அணிந்த காதுகளுடனும், வலக்கையில் மழுவை ஏந்தியும், சுகாசனத்தில் அமர்ந்த கோலம். வலது காலை மடக்கியும், இடது காலை தொங்கவிட்டும், இடையே மிருதங்கத்தை வைத்துக் கொண்டும் அற்புதமான தோற்றத்தில் காட்சி தருகின்றார். கழுத்து, தோள், கரங்கள், வயிறு ஆகிய பகுதிகளில் அணிந்துள்ள ஆபரணங்கள் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டு வியக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன. வெட்டுவான் கோவிலின் சிற்பங்களில் பல எல்லோராவிலுள்ள கைலாஸநாதர் கோவிலுக்கு ஒப்பாக உள்ளன. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பியின் கை வண்ணத்திற்கு உதாரணமாக விளங்குகிறது. இந்த சிற்பக்கோவில் முழுவதுமாக முடிக்கப்படாததற்கு கதை ஒன்று கூறப்படுகிறது. இவ்வூர் சிற்பி தனது பிள்ளையுடன் திருவிழா ஒன்றிற்கு சென்றிருந்தானாம். சிறு வயதினான தனது பிள்ளையை அங்கு தொலைத்து விட்டானாம். பல ஆண்டுகளாக தேடியும் தொலைந்த பிள்ளை கிடைக்கவில்லையாம். பின்னர் ஆண்டுகள் பல கழிந்ததும், சிற்பி மும்முரமாக கழுகுமலையில் சிற்பங்களை செதுக்கிக் கொண்டிருந்தபோது அருகாமையிலுள்ள மலையை குடைந்து சிற்பங்களை செதுக்கிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவனை கண்டானாம். இளைஞனின் சிற்பங்கள் அற்புதமாக இருந்தனவாம். தனக்கு போட்டியாக ஒருவன் கிளம்பி விட்டான் எனக் கருதி இளைஞன் மீது உளியை வீசி எறிந்தானாம். அருகே சென்று உன்னிப்பாக பார்த்ததில் திருவிழாவில் தொலைந்து போன தனது பிள்ளையே அவன் எனத் தெரிந்து கொண்டான். அவன் வீசிய உளியால் இளைஞன் கொல்லப்பட்டதால் தாங்கமுடியாத சோகத்தில் ஆழ்ந்தானாம் சிற்பி என்ற கதை வழக்கத்தில் நிலவுகிறது. வெட்டுவான் கோவிலுக்கு சற்று தள்ளி உள்ள சமணர்களின் கோவிலில் நேமிநாதர், பார்சுவநாதர், பஹுபாலி ஆகிய தீர்த்தங்கரர்களின் சிற்பங்களைக் காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.