அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில் (பவானி)
God Name : சங்கமேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
பாற்கடல் கடையும்போது மிதந்து வந்த அமுதத்தை திரட்டிய திருமால், அதை பராசர முனிவரிடம் அளித்தார். பவானி ஆற்றங்கரையில் அமுதக் குடத்தை புதைத்து வைத்தார் பராசரர். இதை அபகரிக்க முற்பட்ட அசுரர்களை சிவபெருமான் உதவியோடு விரட்டி அடித்தார். சிறிது காலம் பொறுத்து பராசரர், ஆற்றங்கரையை தோண்டிப் பார்த்தபோது அமுதகுடம் லிங்கமாக மாறிவிட்டிருந்தது. லிங்கத்தை வெளியே எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார் பராசர முனிவர் என ஸ்தல வரலாறு.
லிங்கம் இருந்த இடத்திலிருந்து ஊற்று கிளம்பி காவிரி மற்றும் பவானியுடன் கலந்து கொள்கிறது. இந்த ஊற்றை அமுத நதி என்பர்.
வழிபடுவோர்க்கு ஒரு தீங்கும் நண்ணாத (அணுகாத) ஸ்தலமாக இருப்பதால் நணா என்ற பெயரைக் கொண்டது. அம்பாளின் பெயர் பவானி மற்றும் பவானி ஆறு ஓடுவதால் இவ்வூர் பவானி என்ற பெயரைக் கொண்டது.
சங்ககிரி, நாககிரி, மங்களகிரி, வேதகிரி மற்றும் பத்மகிரி ஆகிய ஐந்து மலைகளைக் கொண்ட ஸ்தலம் என்பதால் பஞ்சமலை க்ஷேத்ரம் என்பார்கள்.
ஆண்டிற்கு ஒரே பழம் பழுக்கும் இலந்தை மரம் இத்தலத்திலுள்ளது. அதிலிருந்து கீழே விழுந்த பழத்தை சோழ அரசி ஒருவர் எடுத்து சாப்பிட்டாள். பிள்ளை வரம் கேட்டு இத்தலம் வந்தவள், அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.
வெள்ளைக்கார துரை கலெக்டர் வில்லியம் கேரோ என்பவர் அம்மன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். கோவிலுக்குள் நுழைய தடை இருப்பதால் சந்நிதியின் எதிரிலுள்ள மதிற்சுவரில் மூன்று துளைகள் செய்து அதன் வழியே தரிசித்து வந்தார். ஒரு நாள் இரவு அவர் உறங்கிக் கொண்டிருக்கும்போது, சிறுமி ஒருத்தி கனவில் வந்து அவரை வெளியே ஓடுமாறு கூறினாள். அதன்படியே அவர் வெளியே ஓடி செல்ல, மேற்கூரை இடிந்து விழுவது கண்டு பயந்தார். சிறுமியாக வந்து தன்னை காப்பாற்றிய அன்னை பவானிக்கு தந்தக்கட்டில் ஒன்றை வழங்கியுள்ளார். பல்லக்கு போன்ற ஊஞ்சல் அமைப்பை கொண்டது.
அமாவாசை, கிரகண தினங்களில், ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் சிறப்பு ஆராதனைகள் உண்டு. தினமும் கோபூஜை செய்கின்றனர்.
தேவாரத்திருத்தலம்.
மூலவர்: சங்கமேஸ்வரர், அம்பாள்: வேத நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான சங்கமேஸ்வரர். சுயம்பு வடிவம். அளகேசர், திருநணாவுடையார், சங்கமுகநாதர் என்றெல்லாம் திருநாமங்கள் உண்டு. கிழக்கு பார்த்த சந்நிதி.
அம்பாள் வேதநாயகி நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். பவானி அம்மன் என்றே பிரசித்தம். சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை என்றெல்லாம் திருநாமங்கள் உண்டு.
பிப்ரவரி மாதத்தில் (மாசி மகம் ரதசப்தமியை அடுத்து) ஸ்வாமி - அம்பாள் - சுப்ரமண்யர் ஆகிய மூவரின் மீதும் சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. இதனால் பாஸ்கர க்ஷேத்ரம் என்றும் கூறுவர்.
அம்பாள் சந்நிதியை ஒட்டி ஸ்ரீ ஷண்முக சுப்ரமண்யர் எழுந்தருளியிருப்பது சோமாஸ்கந்த அமைப்பினை கொண்டுள்ளது என்பர். விசாலாட்சி உடனாய காசி விஸ்வநாதர் சந்நிதி கொண்டுள்ளார். ராஜ கணபதி, ஜேஷ்டா தேவி, முத்துக்குமாரசுவாமி, ராவணன் பூஜித்த சஹஸ்ரலிங்கேஸ்வரர், குபேரன் பூஜித்த லிங்கம் ஆகிய மூர்த்திகளை தரிசிக்கலாம்.
அருகேயுள்ள ஜ்வரஹரேஸ்வரர் சந்நித்தியம் மிக்க சந்நிதி கொண்டுள்ளார். செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய தினங்களில் மிளகு ரசம், சுண்டல், அரைக்கீரை ஆகியவற்றை நைவேத்யம் செய்து வழிபட்டு நோய் நீங்கப் பெறுகின்றனர்.
கூடுதுறை:
காவிரி ஆறு, பவானி ஆறு மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி இவை மூன்றும் சேருவதால் முக்கூடல் என்றும் கூடுதுறை என்றும் அழைக்கின்றனர். தட்சிண திரிவேணி சங்கமம் என்ற பெருமையை உடையது.
கூடுதுறையில் அழகிய படித்துறை உள்ளது. எப்போது நீராடினாலும் சிறந்த பலனை தருவது பவானி கூடுதுறை. தென் திசை சந்நிதியில் காயத்ரி லிங்கத்தை தரிசிக்கலாம்.
அபிஷேக மண்டபத்து வடக்கே அமிர்தலிங்கேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். ஆவுடையாரின் மீது, எளிதில் எடுத்து திரும்ப வைக்கும் நிலையிலுள்ள அமுத லிங்கம். மகப்பேறு வேண்டி வருபவர்கள் இந்த அமுத லிங்கத்தை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு கோவிலை வலம் வந்து பிரார்த்திக்கின்றனர்.
இங்கிருக்கும் காவிரி அம்மனுக்கு கருகமணி, காதோலை, மஞ்சள் கயிறு, பூ, தேங்காய், பழம் இவற்றை வைத்து படைத்து கன்னி பெண்கள் வழிபடுகின்றனர்.
தீபஸ்தம்பத்தில் தத்தாத்ரேயர் திருவுருவம் கையில் பிரம்பும் கமண்டலமும் கொண்டு காட்சி தருகிறார். முன் மண்டபத்தில் சூரிய - சந்திரர்கள், சனீஸ்வரர், சித்திவிநாயகர், கல்யாண சுப்ரமண்யர், நால்வர் மற்றும் பஞ்ச லிங்கங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.