ஸ்ரீ ராமபிரான் இலங்கை செல்லும் வழியில் இங்கு வந்தபோது உப்பாற்றின் கரை மண்ணை எடுத்து சக்தி உருவம் செய்து, ஆகம முறைப்படி வழிபாடு செய்துள்ளார். மகுடாசூரன் எனும் அசுரனையும் காலடியில் வைத்தார். பராசக்தி மயான ருத்ரியாக பிரசன்னமாகி ஸ்ரீ ராம அவதார நோக்கம் நிறைவேற வரமளித்தாள் என ஸ்தல வரலாறு கூறுகிறது. ஆனைமலை பகுதியை ஆண்ட நன்னன் எனும் மன்னன், முனிவர் ஒருவர் கொடுத்த அதிசய மாங்கன்றை நதிக்கரையோரமாக நட்டு, காவலுடன் வளர்த்து வந்தான். ஒரே ஒரு முறை ஒரே ஒரு கனியை மட்டும் கொடுக்கும் அதிசய மரம். இப்பகுதியைச் சேர்ந்த செல்வந்தரின் மகள் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது, இந்த மாங்கனி ஆற்றில் விழுந்து மிதந்து சென்று அவளருகே நின்றது. அதன் நிறம் மற்றும் வாசனையால் கவரப்பட்ட அந்த பெண் அந்த மாங்கனி மீது ஆசை கொண்டு அதை எடுத்து சாப்பிட்டு விட்டாள். அதனால் கோபம் கொண்ட மன்னன் அவளுக்கு மரண தண்டனை விதிக்கிறான். மகள் செய்த தவற்றிற்கு அபராதமாக எடைக்கு எடை தங்கமும் 87 ஆண் யானைகளையும் தருவதாக செல்வந்தர் கூறியும், அதை ஏற்காது மன்னன் மரண தண்டனையை நிறைவேற்றி விட்டான். அவளைப் புதைத்த இடத்தில் அவளைப் போன்ற மண் உருவம் ஒன்றை அமைத்தனர். மயானத்தில் சயனத்திருக்கும் அந்த மண் உருவம் மாசாணி என்றழைக்கப்பட்டாள். சக்தி வாய்ந்த தெய்வமாக பலராலும் வழிபடப்பட்டாள் என்ற செவி வழி கதை ஒன்று நிலவுகிறது. நாலரை மீட்டர் நீளமுள்ள புடவை சாத்தி, எலுமிச்சம்பழ மாலை அணிவித்து, செவ்வரளி - வெள்ளரளி மாலை சாத்தி, சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர்.
சதுர வடிவில் அமைந்துள்ள பிரதான கருவறையில் மயான தேவதையாக மாசாணியம்மன் சயனத் திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். 17 அடி நீளம் கொண்ட சுதையாலான திருமேனி. நெற்றியில் ஸ்ரீ சக்கரம் பொறித்து அதில் மஞ்சள் காப்பிட்டுள்ளனர். திருவடிகளருகே அசுரனின் உருவம் காணலாம். திருப்பாதங்களின் முன்பாக மூன்றரை அடி உயர அம்மன் விக்ரகம் ஒன்றும் உள்ளது. மூலவர் சுதையாலானவர் என்பதால் இந்த சிறிய விக்ரகத்திற்கே அபிஷேகம் செய்யப்படுகிறது. பஞ்சலோகத்திலான உற்சவ விக்ரகத்தையும் கருவறையில் தரிசிக்கலாம். மகா மண்டபத்தில் சங்கு, சக்கரம், அபய - வரத ஹஸ்தங்களோடு கூடிய புவனேஸ்வரி தேவியின் கற்சிற்பத்தை தரிசிக்கலாம். இரு கரங்களில் பாத்திரம் ஏந்தியபடி முனீஸ்வரர், நாய் வாகனத்தோடு பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். மண்டபத்தை சுற்றியுள்ள தனித்தனி சந்நிதிகளில் பேச்சியம்மன், துர்க்கை, மகிஷாசூரமர்த்தினி, கருப்பராயன் ஆகிய கிராம தெய்வங்களை தரிசிக்கலாம். இரண்டு பக்கங்களிலும் ராகு - கேது இடம் பெற்ற விநாயகரின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. மண்டபத்தை சுற்றி வரும்போது நீதிக்கல் காணப்படுகிறது. இதன் எதிரே குடம் போன்ற அமைப்பிலுள்ள குடக்கல் ஒன்றும் உள்ளது. மிளகாயை அரைத்து இந்த குடக்கல்லில் பூசி பிரார்த்தனை செய்தால் திருட்டு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும். பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி ஆகியன விலகும். தீவினை செய்தோரின் தலையும் உடலும் மிளகாய் அரைத்து தேய்த்தது போல் காந்தும். வேண்டுதல் சீட்டு வழிபாடும் நடைமுறையிலுள்ளது. அம்மனின் பாதங்களில் வைத்து பூஜித்த கருப்பு கயிற்றை கங்கணமாக அணிந்தால் தீவினைகளிலிருந்து பாதுகாக்கிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.