அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில் (பேரூர் - கோயம்புத்தூர்)

God Name : பட்டீசுவரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

காமதேனு பசு இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டது. காமதேனுவின் மகளான பட்டி எனும் கன்றுக்குட்டி துள்ளி குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. லிங்கமூர்த்தியை மூடியிருந்த புற்று ஒன்றில் அதன் கால் சிக்கி மாட்டிக் கொண்டது. பின்னர் கொம்பால் புற்றைக் கிளறியதில், லிங்கத் திருமேனியில் அதன் குளம்பு அழுந்திய தடங்களில் இருந்து குருதி வெளிப்பட்டது. நடந்தவைகளை தாய் காமதேனுவிடம் கூறியது பட்டி. சிவ நிந்தனை செய்து விட்ட கன்றுக்குட்டிக்காக மனம் வருந்தியது காமதேனு. பிரத்யட்சமான இறைவன், 'உனது கன்றின் செயலை குற்றமாக எடுத்துக் கொள்ளாதே. குளம்பு சுவட்டையும், கொம்பு சுவட்டையும் எமது திருமேனியில் ஏற்று அருளினோம்' எனக் கூறினார். 'காமதேனுவாகிய நீ வழிபட்டதால் இவ்வூர் காமதேனுபுரி - பட்டிபுரி என அழைக்கப்படும்' என்றும் கூறியதாக ஸ்தல வரலாறு. இதனால் இவ்விறைவனுக்கு பட்டிநாதர் என்ற பெயர் வந்தது. வெள்ளிமலை இறைவனின் சிரசாகவும், பேரூர் திருவடிகளாகவும் இறைவனின் எண்ணத்தில் சிருஷ்டிக்கப் பெற்றதாக ஐதீகம். ஆதி அரச மரத்தின் கீழ் சித்த மூர்த்திகளாக வந்த சிவபெருமான் சபையை உண்டாக்கி, அதில் கூத்தபிரான் திருவுருவத்தை உண்டாக்கினார் என்றும், இதனடியில் பிரம்மா, விஷ்ணு, காலவர், துர்க்கை ஆகியோர்க்கு திருநடனம் பரிந்து காட்சி தந்ததாக புராணக் குறிப்பொன்று கூறுகிறது. கோமுனி - பட்டிமுனி தவம் செய்து பங்குனி உத்திர திருநாளில் முக்தி பெற்றதாக ஸ்தல வரலாறு. பரசுராமர் குருவாயூர் போகும் வழியில் இத்தலம் வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது. காமதேனு பசு, பஞ்ச பாண்டவர்கள், வியாக்ரபாதர், பதஞ்சலி, காலவரிஷி மற்றும் எண்ணற்ற முனிவர்கள் முக்தி பெற்ற ஸ்தலம். மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் எனும் மூன்று வகை சிறப்புகளை உடைய ஸ்தலம். திப்பு சுல்தான் காலத்தில் ஏற்படுத்திய தீவட்டி சலாம் எனப்படும் வழிபாடு இன்றளவும் தொடர்கிறது. மாசி மகம், பங்குனி உத்திரம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
மூலவர்: பட்டீசுவரர், அம்பாள்: பச்சை நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக, ஆத்மார்த்த லிங்கமாக எழுந்தருளியுள்ளார் பட்டீசுவரர். சுயம்பு லிங்கம். உயரமான பாணம் கொண்ட அழகிய திருமேனி. ஐந்துதலை நாகம் குடை பிடிக்க, திருமுடியில் சுற்றிய சடைக்கற்றையுடனும், அதனை கரை போல காக்கும் கங்கையுடனும், சர்ப்ப பூணூல் தரித்தும் காணப்படுகிறார். லிங்கத் திருமேனியில் மாட்டின் கால் குளம்பு சுவடுகளும், கொம்பின் சுவடுகளும் காணப்படுகின்றன. இவருக்கு பட்டி நாதர் என்ற பெயரும் உண்டு. கருவறையின் பின்புறம் பன்னீர் மரம் நடப்பட்டுள்ளது. வலதுபுற மண்டபத்தருகே சந்நிதி கொண்டு எழுந்தருளி ஆசி வழங்குகின்றார் கணபதி. நந்தியம் பெருமானுக்கு சற்றுத் தள்ளியுள்ள உட்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, சப்தரிஷி லிங்கம், சஹஸ்ரலிங்கம் மற்றும் 63 நாயன்மார்கள், வள்ளி - தெய்வயானை உடனாய சுப்ரமண்யர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். வடகிழக்கு மூலையில் உள்ள ஞான பைரவரை தரிசிக்கலாம். பச்சை நாயகி எனப்படும் மரகதாம்பிகை தனிக்கோவில் கொண்டு எழுந்தருளி நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். இடது கரம் திருவடியை சுட்டிக் காட்ட, வலது கரம் அபய முத்திரை கொண்டுள்ளது. நான்கடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. பச்சை நிறம் கொண்ட கல்லினால் உருவாக்கப்பட்டவள் என்பதால் பச்சைநாயகி என்ற பெயரைக் கொண்டார். அன்னை பச்சைநாயகி சந்நிதியின் இடதுபுறமாக உள்ள சந்நிதியில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தேவியர்களுடன் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். வெளிப் பிரகாரத்திலுள்ள சந்நிதியில் மேற்கு பார்த்து எழுந்தருளியுள்ளார் பாலதண்டபாணி ஸ்வாமி. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கு அழகினை கொண்ட திருவுருவம். கோரக்கர் எனும் சித்தரால் வழிபடப்பட்டவர். பாலதண்டபாணிக்கு அபிஷேகம் செய்த அபிஷேக தீர்த்தம் விழும் தொட்டியின் கீழே கோரக்கர் சித்தரின் குகை இருந்ததாகவும், அதை கலைக்காமல் அப்படியே திருப்பணி செய்ததாகவும் கூறப்படுகிறது. திருமூலர் முதலாய பதினெட்டு சித்தர்களால் வழிபடப்பட்டவர். வடக்கு பிரகாரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயஸ்வாமி சந்நிதி கொண்டுள்ளார். கனகசபை: கலைக் களஞ்சியம் என்றும் மேலை சிதம்பரம் என்றும் போற்றப்படும் கனகசபை மண்டபத்து 28 தூண்களும் பெருமை சேர்ப்பவை. வரிசைக்கு நான்கு வீதம் ஏழுவரிசைகளை கொண்டுள்ளது. நடு வரிசையின் 14 தூண்களும் காந்த தன்மைகொண்டுள்ளன. முன் மண்டபத்திலுள்ள எட்டுத் தூண்களில் நர்த்தன கணபதி, ஆறுமுகன், ஊர்த்வ தாண்டவர், ஆலங்காட்டுக் காளி, அக்னி வீரபத்ரர், அகோர வீரபத்ரர், பிச்சாடனர், யானையுரி போர்த்த மூர்த்தி எனப்படும் கஜ சம்ஹாரர், ஆரோகணித்து வரும் குதிரைவீரன் ஆகிய சிற்பங்கள் சிறந்த சிற்ப வேலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. விதானம் மற்றும் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் அற்புதமானவை. தாமரை மலர்கள், கல் சங்கிலிகள், சிற்பத் தூண்கள் என தேவலோகம் போல் காட்சி தருகிறது. சிவகாமசுந்தரி உடனாய நடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ள கனகசபையில் கோமுனியும் பட்டியும் இடம் பெற்றுள்ளன. கோமுனி பட்டி ஆகிய இருவருக்காக ஆடிய பாதத்துடன் காட்சி தரும் நடராஜரின் அழகு கண்களையும் மனதையும் விட்டு அகலாது. துர்க்கை அம்மன், கிருஷ்ணர் சந்நிதிகள் மற்றும் பிரம்மகுண்டம் என்றழைக்கப்படும் திருநீர்மேடு ஆகியன தரிசிக்கலாம். எட்டு மூலைகளையும் பதினாறு கோணங்களையும் கொண்ட தெப்பக்குளம் ஒன்றும் உள்ளது. வற்றாத நீர் உள்ள தெப்பக்குளம். தேவார வைப்புத்தலம்
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.