மகாபலி சக்ரவர்த்தியின் கொட்டத்தை அடக்க திருமால் வாமன வடிவம் கொண்டு மகாபலியிடம் சென்று, தான் தியானம் செய்ய சிறிதளவு நிலப்பரப்பு வேண்டும். ஆதலால் மூன்றடி மண் தானமாகத் தரும்படி கேட்டார். சக்ரவர்த்தியும் மூன்றடி மண் தானமாகத் தர சம்மதித்தார்.
தன் காலால் மூன்றடி மண் அளந்துகொள்வதாகக் கூறிய வாமனன், திரிவிக்ரம வடிவம் கொண்டு, ஒரு திருவடியால் மேலுலகத்தையும், மற்றோர் திருவடியால் பூலோகத்தையும் அளந்துவிட்டு, மூன்றாவது அடிக்கு இடமில்லை என, மகாபலியின் சிரசில் வைத்து, அவனை பாதாளம் சேர்த்ததாக புராண வரலாறு.
பெருமாளின் திருவடியின் கீழே அகப்பட்டுக் கொண்ட பலி சக்கரவர்த்தி, திரிவிக்ரம கோலத்தை தரிசிக்க முடியவில்லையே என வருந்தி, பிரார்த்தனை செய்ததால் இத்தலத்தில் உலகளந்த பெருமாள் கோலத்தை காட்டியதாக ஸ்தல வரலாறு. அப்போதும் பலி சக்ரவர்த்தி முழுமையாகப் பார்க்க முடியவில்லையே என ஆதங்கப்பட்டதால் ஆதிசேஷ வடிவில் காட்சி தந்தாராம்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மூலவர்: ஊரகத்தான்் உற்சவர்: பேரகத்தான்் தாயார்: அமுதவல்லி.
மூலஸ்தானத்தில் ஊரகத்தான் எனப் போற்றப்படும் உலகளந்தப் பெருமாள் திரிவிக்ரம வடிவம் கொண்டு சேவை சாதிக்கிறார். மேற்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலம். சாம்பிராணி தைலக்காப்பு சாத்தப்படுகிறது. ஆதிசேஷனுக்கும் மகாபலிக்கும் பிரத்யட்சமானதாக ஐதீகம்.
முப்பத்தைந்தடி உயரமும், இருபத்திநான்கு அடி அகலமும் கொண்ட ஆஜானுபாகுவான அழகிய திருமேனியுடன் புடைப்பு சிற்பமாக தரிசனம் தருகிறார். வலது திருவடி மகாபலியின் தலை மீதும், இடது திருவடி தென் திசைப் புறமாக தொடைக்கு மேல் நீட்டப்பட்டும், விஸ்வரூப தரிசனம் காட்டுகிறார். இரண்டு கரங்களை இரண்டு திசைகளில் வியாபித்தபடியும், இடது கரத்தின் இரண்டு விரல்களை உயர்த்தியும், வலது கரத்தின் ஒரு விரலை உயர்த்தியும் காட்சி தருகிறார்.
திருவடி பூமியை அளந்துகொள்ள, தோள்கள் திக்குகளில் வியாபித்திருக்க, திருமுடி மேலுலகத்தை அளந்துகொண்டது என்ற பொருளில் ஆழ்வார் பாடியுள்ளார். உரகரூபியாய் சேவை சாதித்ததால் ஊரகம் எனப் பெயர் பெற்றது.
மூலஸ்தானத்தின் பக்கத்திலுள்ள அர்த்த மண்டபத்தின் வடபுறமாக உள்ள சிறிய சந்நிதி ஒன்றில், பாம்பு வடிவில் ஆதிசேஷனாக திருக்கோலம் கொண்டுள்ளார்.
உற்சவர் பேரகத்தானின் எழில் வடிவம் காணக் கிடைப்பதில்லை.
தாயார் அமுதவல்லி மிகுந்த வரப்பிரசாதி. ஆரணவல்லி என்ற திருநாமமும் உண்டு. கிழக்கு பார்த்த சந்நிதி.
ஊரகம் தவிர நீரகம், காரகம், கார்வானம் ஆகிய மூன்று திவ்ய தேசங்களின் பெருமாள் திருவுருவங்களையும் இத்தலத்தில் சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.