அருள்மிகு சத்யவாகீஸ்வரர் திருக்கோவில் (களக்காடு)
God Name : சத்யவாகீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வயல்களும் வாழைத் தோப்புகளும் சூழ்ந்த பசுமையான கிராமம். பச்சையாற்றை ஒட்டி களாமரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த காட்டில் தோன்றிய ஸ்தலம் என்பதால் களந்தை எனப்படுகிறது. 11ஆம் நூற்றாண்டில் வீர மார்த்தாண்ட பாண்டியனால் கட்டப்பட்ட கோவில்.
சீதையை ராவணன் கவர்ந்து சென்ற இடமான சோரகாடவி எனப்படும் சோர ஆரண்யம் இதுவே. சீதையைப் பிரிந்து துயரத்தால் வருந்தி நின்ற ராமன் இங்குள்ள புன்னைவனநாதரை வழிபட்டுள்ளார். இவ்விறைவன் ராமனுக்கு சத்திய வாக்கு அளித்ததால் சத்தியவாகீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். பின்னர் சீதையை மீட்டுத் திரும்பும்போதும் சீதையுடன் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டார் என்று ஸ்தல புராணம் கூறுகிறது.
இவ்வூரிலுள்ள கிருஷ்ணன் கோவில் பிரபலமானது. ராமநவமிக்கு 10 நாட்கள் முன்னதாக ஆரம்பித்து ஆஞ்சநேய உற்சவம் நடைபெறும் நாள் வரை விழா கொண்டாடுவார்களாம். இதை 105 ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்று பட்டாச்சார்யார் தெரிவிக்கிறார்.
வியாசர் பூஜித்த, நினைத்ததை முடித்த விநாயகர் கோவில் ஒன்றும் உள்ளது.
மூலவர்: சத்யவாகீஸ்வரர், அம்பாள்: கோமதியம்மை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சத்யவாகீஸ்வரர். கம்பீரமாக தரிசனம் தரும் அழகான லிங்க மூர்த்தம். இவருக்கு பரிதி நாயகன், திரிபுரஹரன் ஆகிய திருநாமங்களும் உண்டு. புறமேரிச்சுவரமுடைய நாயனார் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தராயணத்தில் மூன்று நாட்களும், தட்சிணாயணத்தில் மூன்று நாட்களும் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.
அம்பாள் கோமதியம்மை எனப்படும் ஆவுடை நாயகியுடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
ஸ்தல விருட்சமான புன்னை மரத்தடியில் புன்னைவனநாதர் மற்றும் திரிபுரசுந்தரி கோவில் கொண்டு அருள்பாலிக்கின்றனர்.
புன்னைவனநாதர் கருவறை முன்பாக உள்ள மண்டபம் சிற்ப வேலைப்பாடுகளில் சிறந்து விளங்குகிறது. பீமனைப் பிடிக்க வரும் புருஷா மிருகம் அவனது தோளைப் பற்றும் பாவனையிலும், யாகசாலை இருக்கும் பகுதியில் ஒரு காலை வைத்துவிட்ட குதூகலத்தில் பீமனும் காணப்படுவது எடுத்துக்காட்டாக உள்ளது. வீரமார்த்தாண்ட பாண்டியன், சுந்தரர், சேரமான்பெருமான் ஆகியோரின் திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன. இசைத் தூண்கள் பெருமைக்கு உரியவை. ராஜகோபுரத்தில் 1500 (ஸ்டக்கோ - லைம் மார்டர்) சுதைச் சிற்பங்கள் புராணத் தொடர்புடைய நிகழ்வுகளைத் தெரிவிக்கின்றன.
அன்னலட்சுமியின் திருவுருவம் நினைவில் நிற்கிறது.
மூன்று முகங்கள், மூன்று கைகள், மூன்று கால்களுடன் காட்சி தரும் ஜ்வரஹரேஸ்வரரின் திருவுருவம் மிகப் பெரிய அளவில் உள்ளது. இவருக்கு மிளகு அரைத்து நைவேத்தியம் செய்தால் ஜுரம் கண்டவர்கள் சுகமடைவார்கள்.
வலச்சுற்றில் நடராஜப் பெருமான் சந்நிதி கொண்டுள்ளார். ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட ஆறடி உயரத் திருமேனி. கொள்ளை அழகுடன் காணப்படுகிறார். அருகே சிவகாமி அம்மையுடன் இருக்க, இரண்டு பக்கங்களிலும் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் காணப்படுகின்றனர்.
முன் மண்டபத்தில் காணப்படும் 16 இசைத் தூண்களும் ஏழு ஸ்வரங்களை மூன்று ஸ்தாயிகளில் ஒலிக்கும் சிறப்பைக் கொண்டவை.
135 அடி உயரமும் 9 நிலைகளைக் கொண்டதுமான ராஜகோபுரம் பிரசித்தி பெற்றது. சுவற்றின் இரண்டு பக்கங்களிலும் மூலிகைகளைக் கொண்டு வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் ராமாயண - மகாபாரத இதிகாசங்களுடன் தொடர்புடையவை. ஆவுடையார் கோவிலில் உள்ளது போல் அழகிய கொடுங்கைகள் உள்ளன.
தேவார வைப்புத்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.