ஆடு மேய்க்கும் ஏழைச் சிறுவன் ஒருவன் தினமும் பாலைச் சுமந்து சென்று ஒரு பணக்கார எஜமானுக்குக் கொடுப்பது வழக்கம். ஒரு நாள், கையில் குழந்தையுடன் அழகான தேவதை அவன் முன் தோன்றி, தனது குழந்தைக்குக் கொஞ்சம் பால் தரும்படிக் கேட்டாள். சிறுவன் பாலைத் தந்ததும், வாங்கிப் பருகிவிட்டு, அந்தத் தேவதை மாயமாய் மறைந்து போனாள்.
பின்னர் சிறுவன் தன் எஜமானனிடம் சென்று, நடந்தவைகளைக் கூறி, தாமதமாக வந்ததற்கும், பால் அளவு குறைந்ததற்கும் மன்னிப்புக் கோரினான். பால் பானையின் மூடியைத் திறந்து பார்த்த எஜமானன், அதில் வழியும் அளவிற்குப் பால் இருப்பதைக் கண்டு, ஏதோ அதிசயம் நடந்திருக்கிறது என ஊகித்தார். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தார். இந்த நிகழ்வின்போது மாதா முதன்முதலாகத் தோன்றினார்.
வேளாங்கண்ணி ஊரைச் சேர்ந்த ஒரு ஏழை விதவைத் தாயின் மகன் தினமும் நடுத்திட்டிலுள்ள மரத்தின் கீழ் அமர்ந்து, பயணிப்போர்களுக்கு மோர் விற்பதை, ஜீவனத்திற்காகச் செய்து வந்தான். நடக்க முடியாத சிறுவன் அவன். அவனிடம் ஒரு நாள், ஓர் அழகான தேவதை அழகான குழந்தை ஒன்றை ஏந்தியபடி அவன் முன் தோன்றி, குழந்தைக்கு மோர் தரும்படிக் கேட்டார். மோரை வாங்கிக் குழந்தைக்குப் பருகத் தந்துவிட்டு, சிறுவனிடம் நாகப்பட்டினம் சென்று ஒரு கத்தோலிக்கரிடம் நடந்த சம்பவங்களை விளக்கிக் கூறுமாறு சொன்னார்.
தன்னால் நடக்க இயலாது என்று கூறிய அச்சிறுவனை, 'எழுந்து நட' எனக் கூறினார். ஆச்சரியமாக அந்தச் சிறுவனால் நடக்க முடிந்தது. நடந்தவைகளைக் கேட்டறிந்த கத்தோலிக்கரும், வியப்பு மேலிட, சம்பவம் நடந்த இடத்திற்கு நேரே வந்தார். இந்த நிகழ்வின்போது இரண்டாம் முறையாக மாதா நேரில் தோன்றினார்.
மேரி மாதா மக்களுக்குக் காட்சி கொடுத்துச் சாட்சி சொன்ன இடம், மாதா குளம் என்று அழைக்கப்படுகிறது.