மறதி ஏற்படுவதால் தனது படைப்புத் தொழிலைச் சரிவர செய்ய இயலாமல் போன பிரம்மா, காஞ்சியில் ஒரு யாகம் செய்தால் ஆயிரம் யாகங்கள் செய்த பலன் கிடைக்கும் என்பதால், பிரம்மதேவன் இங்கு சரஸ்வதியின்றி யாகம் தொடங்கினார். கோபம் கொண்ட கலைமகள் வேகவதி ஆறாக உருவெடுத்து வேகமாக பாய்ந்து வந்தாள். பிரம்மனும் உடனிருந்தவர்களும் யாகம் அழிந்துவிடுமே என அச்சம் கொண்டனர்.
உடனே மகாவிஷ்ணு ஆற்றின் குறுக்காக அணையாக புஜங்க சயனம் கொண்டு தடை ஏற்படுத்தவே, மேலே செல்லமுடியாத சரஸ்வதி அந்தர்வாஹினியாகிவிட்டாள். வேகவதி நதிக்கு அணையாக இருந்ததால் 'வெக்கணை' எனப் பெயர் பெற்றது என வரலாறு. சரஸ்வதி வெட்கி தலை குனிந்ததால் 'திருவெக்கா' என்று அழைக்கின்றனர்.
திருமழிசையாழ்வாரும் அவரது சீடன் கணிகண்ணனும் இந்த ஸ்தலத்தில் கைங்கர்யம் செய்து வந்தனர். அரசவையில் பணியாற்றிய கிழவி ஒருத்தி, இவர்கள் இருக்கும் இடத்தை சுத்தம் செய்வது போன்று பல பணிகளை செய்து வந்தாள். அவளின் மூப்பும், தள்ளாமையும் கண்டு இரக்கமுற்ற கணிகண்ணன் ஒரு பாசுரம் பாடி பெருமாள் அருளால் அவளைக் குமரியாக்கினான். இதைக் கேள்வியுற்ற மன்னன் தன்னையும் இளமையாக்க வேண்டினான். கணிகண்ணன் அதற்கு இசையவில்லை.
கோபம் கொண்ட மன்னன் கணிகண்ணனை நாடு கடத்தினான். திருமழிசையாழ்வார் தாமும் சீடனுடன் செல்ல முற்பட்டு, பெருமாளை பிரிய மனமில்லாமல், "பைந்நாகப் பாயை சுருட்டிக்கொள்" என்று பாட ஆரம்பித்ததும், பெருமாளும் நகரத்தை விடுத்து இவர்களுடன் சென்றார்.
பாலாற்றின் வடகரையில் ஓரிடத்தில் மூவரும் தங்கினர். (தற்போது ஓரிருக்கை எனப்படும் ஊர்). பெருமாள் கோவிலை விடுத்து சென்றதும் காஞ்சி நகரமே பொலிவிழந்தது. தன் தவற்றை உணர்ந்த மன்னன் ஆழ்வாரிடம் மன்னிப்பு கேட்க, ஆழ்வாரும் "உன் பைந்நாகப் பாயை விரித்துக் கொள்" எனப் பாடினார். பெருமாளும் மீண்டும் பழையபடி கோவிலுக்கே திரும்பினார் என ஸ்தல வரலாறு.
இதனால் இவர் யதோத்காரி, சொன்ன வண்ணம் செய்த பெருமாள் எனத் திரு நாமங்கள் கொண்டார்.
பொய்கை ஆழ்வாரின் அவதார ஸ்தலம். பாஞ்சசன்யம் எனும் சங்கின் அவதாரமாக ஒரு தாமரை மலரில் அவதரித்தார் எனக் கூறுவர்.
பாஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்ய ஸ்வாமிகள் ஸ்ரீ யதோத்காரி சுப்ரபாதம் என்னும் நூலை எழுதியுள்ளார். ஸ்ரீ வேதாந்த தேசிகர் வேகா சேது ஸ்தோத்ரம் எழுதியுள்ளார்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.