மூலவர்: விருத்தபுரீஸ்வரர், அம்பாள்: பெரிய நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் விருத்தபுரீஸ்வரர். 'பழம்பதி நாதர்' என்று அழகிய தமிழில் அழைக்கின்றனர். மிகப் பெரிய லிங்கத் திருமேனி. ஒன்பதடி உயரமும், எட்டரை அடி சுற்றளவும் கொண்ட சதுர்முக லிங்க மூர்த்தம். கீழே உள்ள ஆவுடையார் இரண்டு பெரும் கற்களால் இணைக்கப்பட்டுள்ளது.
ஆலயத் திருப்பணிக்காக தோண்டியபோது இந்த லிங்கத்தின் அடிப்பாகம் புலப்படவில்லையாம். நான்கு மூலைகளில் கல்தூண் எழுப்பி, பலகை போட்டு நின்று கொண்டு அபிஷேக ஆராதனை செய்கின்றனர்.
தஞ்சை பிரகதீஸ்வரரை அடுத்து, இதுவே பெரிய லிங்கத் திருமேனியாகக் கருதப்படுகிறது.
சுவாமிக்கு 3 முழமும், ஆவுடையாருக்கு 30 முழமும் வஸ்திரம் தேவைப்படுவதால், "மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று" என்று குறிப்பிடுவார்கள்.
தனிக்கோவில் கொண்டு எழுந்தருளியுள்ளார் அம்பாள் பெரிய நாயகி. 'கச்சணி முலையம்மை', 'பிரஹந் நாயகி' ஆகிய திருநாமங்களும் உண்டு.
இங்கு குடைவரையிலுள்ள காளியம்மன் அநேக பக்தர்களால் வழிபடப்படுகிறாள். கருவறையிலுள்ள திரிசூலத்தின் மேல் கவசம் சாத்தி வழிபடுகின்றனர்.
வல்லபை கணபதி மற்றும் இந்திரனால் பூஜிக்கப்பட்ட ஆகண்டல விநாயகரையும் சேர்த்து ஐந்து விநாயகர்களை தரிசிக்கலாம். சதுர்முக லிங்கம், பைரவர், ஞாயிறு-திங்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14 சிவத்தலங்களின் மூர்த்தங்களை இங்கு தரிசனம் செய்யலாம்.
நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அகஸ்திய லிங்கம் ஆகிய மூர்த்தங்கள் வலச்சுற்றில் உள்ளனர். சிவஞான சபையில் இரண்டு நடராஜர்களைக் காணலாம். உட்பிரகாரத்தில் ஆகண்டலன் எனும் ஆதி இந்திரன் வித்தியாசமான அழகுடன் காணப்படுகிறார்.