சிவபெருமானை மதியாது தட்சன் செய்த யாகத்தை வீரபத்ரர் அழித்தார். யாகத்தில் பங்கு கொண்ட அனைவரையும் தண்டித்தார். இதில் கலந்து கொண்டு தனது பற்களை இழந்து தண்டிக்கப்பட்ட சூரியன் இத்தலம் வந்து இங்குள்ள விநாயகரை முறைப்படி பூஜித்து ஆராதனை செய்தான். பிரத்யட்சமான விநாயகர் அவனது தவறான செய்கைக்கு மன்னிப்பளித்து வரமருளினார் என ஸ்தல வரலாறு.
தனக்கு பிரத்யட்சமான அதே கோலத்தில் இங்கு கோவில் கொள்ள வேண்டுமெனவும், விநாயகரின் திருமேனி மீது எப்போதும் தனது ஒளி படர்ந்து கொண்டே இருக்க வேண்டும் எனவும் சூரியன் கேட்டுக் கொண்டதற்கிணங்க இங்கு தரிசனம் தருகின்றார்.
ராமபிரான் சீதையை மீட்க செல்லும் வழியில், இந்த சுயம்பு விநாயகரைப் பற்றி தெரிந்து கொண்டு இங்கு வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது. ராமேஸ்வர யாத்திரை செல்பவர்கள் இவரை வழிபட்ட பின்னரே பயணத்தை மேற்கொள்வது வழக்கம்.