சூரபத்மன், தாரகன், சிங்கமுகன் எனும் மூன்று அசுரர்கள் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். பிரத்யட்சமான பிரம்மனிடம் சாகாவரம் கோரினர். அதைத் தர மறுத்த பிரம்மனிடம், சிவபெருமானுக்கும் உமையவளுக்கும் பிறக்கும் குமாரனால் மட்டுமே தங்களுக்கு அழிவு உண்டாக வேண்டும் என்ற வரத்தை வேண்டினர். பிரம்மனும் கோரிய வரத்தைத் தந்துவிட்டார். சிவபெருமான் தவத்தில் ஆழ்ந்திருப்பதாலும், பிரம்மசார்யத்தைக் கடைபிடிப்பதாலும், அவருக்குக் குமாரன் பிறக்க வாய்ப்பில்லை எனக் கருதியே, இந்த வரத்தைக் கேட்டுப் பெற்றனர்.
அதன் பிறகு அட்டகாசங்களில் ஈடுபட்டு, பலவற்றை அபகரித்து, பலவழிகளிலும் இம்சித்தனர். இதனால் அவதியுற்ற தேவர்களும், இந்திரனும் சிவபெருமானது யோகநிலைத் தவத்தைக் கலைக்க மன்மதனின் உதவியை நாடினார்கள்.
மன்மதன் என்பதற்கு மனதில் ஆசைகளை வளர்ப்பவன் என்று பொருள். மான் வண்டி, கிளி வாகனம், மகளிர் படை, மீன் கொடி ஆகியவற்றிற்கு உடமையாளன். மான் பூட்டப்பட்ட தென்றல் எனும் தேரில் கரும்பு வில்-மலர் பாணங்கள் கொண்டு வருபவன். இவனுடைய ஆயுதங்களில் உயர்ந்தது மோஹன அஸ்திரமாகும்.
சிவபெருமான் - பார்வதி மீது மோஹன அஸ்திரங்களை வீசி அவர்களை அன்பு கொள்ளத் தூண்ட வேண்டும் என்றதும், நடுங்கிப் போனான் மன்மதன். இச் செயலுக்கு இணங்க மறுத்த மன்மதனை பிரம்மன், இந்திரன் ஆகியோர் தொடர்ந்து வற்புறுத்தவே, இணங்கினான்.
சிவபெருமான் தவம் செய்து கொண்டிருந்த வனத்திற்குப் போய், புன்னை மரங்களின் பின்னால் ஒளிந்து கொண்டு, மலரம்புகளை ஏவினான். தன்னை ஒரு க்ஷணம் மனம் தடுமாறச் செய்தவன் யார்? எனக் கோபம் கொண்ட சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்து அதிலிருந்து வந்த அக்னியால் மன்மதனைச் சுட்டு எரித்து சாம்பலாக்கி விட்டார்.
மன்மதன் சாம்பலானதால் துடித்துப் போன ரதி தேவி, தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டி, சிவபெருமானிடம் மன்றாடினாள். கருணை கொண்டு அவனுக்கு உயிர் கொடுத்த சிவபெருமான், உருவம் கண்களுக்குப் புலப்படாத அநங்கன் ஆக்கிவிட்டார். அவனுக்கு உருவத்தை அளிக்குமாறு ரதி தேவி மீண்டும் வேண்டினாள். அதற்கிணங்கி - கிருஷ்ணருக்கு மகனாகப் பிறக்கும் வரத்தை அளித்தார். அப்படிப் பிறந்தவன்தான் பிரத்யும்னன். ரதிதேவியும் மாயாதேவி என்ற பெயரில் பிறந்து பிரத்யும்னனை மணந்தாள்.
ஒவ்வொரு வருடமும் மாசி மகத்தன்று காமதகனமும், ரதிக்கு அருள் புரிவதும் ஐதீகமாகக் கொண்டாடி மகிழ்வர். நட்டு வைத்திருக்கும் கரும்பை தீயிட்டு கொளுத்துவார்கள். நல்லதொரு நாளில் மன்மதனை எழுப்பும் படலம் கொண்டாடப்படும்.
மன்மதனிடம் தேவர்கள் வேண்டிக் கொண்ட இடம் தேவனூர். அதற்கவன் உறுதி பூண்டு கங்கணம் தரித்த இடம் கங்கணம் புதூர். வலது காலை ஊன்றி, இடது கால் வளைத்து குறி பார்த்த இடம் கால்வளைமேடு. வில்லை வளைத்த இடம் வில்லிய நல்லூர். பஞ்ச பாணங்களைவிட்ட இடம் ஐவாணநல்லூர். இறைவன் வெற்றிக் கூத்தாடிய இடம் கூத்தன் வாழ்க்கை. இவையனைத்தும் கொருக்கையைச் சுற்றியுள்ள கிராமங்கள்.
மன்மதனை எரித்த இடம் விபூதிக் குட்டை எனும் பெயரில் 1 கி.மீ தொலைவிலுள்ளது. பூமியில் தோண்டத் தோண்ட வெண்மையான விபூதி கிடைக்கும்.
தீர்க்கவாகு எனும் முனிவர் அபிஷேகம் செய்வதற்காக தனது இரண்டு கைகளை உயரத் தூக்க அவை குறுகின. இவ்விறைவனை வேண்டி தன் குறையைப் போக்கிக் கொண்டார். குறுங்கை முனிவர் வழிபட்டதால் திருக்குறுக்கை எனப் பெயர் கொண்டு, காலப்போக்கில் கொருக்கை என்றானது.
தேவாரத் திருத்தலம் - அஷ்ட வீரட்டானங்களுள் ஒன்று.