மூலஸ்தானத்தில் ஸ்ரீ வீர கோதண்டராமர் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். மூலவர் இல்லை. உற்சவ விக்ரகங்களே சேவை சாதிக்கின்றன. கற்சிலையல்ல, ஐம்பொன் விக்ரகங்கள்.
வசீகரம், கம்பீரம், வீரம், காருண்யம் அனைத்தும் ஒருங்கே பொருந்தி அமைந்துள்ள ஐந்தடி உயரம் கொண்ட அழகிய பஞ்சலோக விக்ரகம். மணி மகுடம், காதணி, யக்ஞோபவீதம், கை வளை, கால் கொலுசு, ரட்சா பந்தனம் என ஒவ்வொன்றாக ரசித்துப் பார்க்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
திருமார்பில் லட்சுமி தேவியின் திருவுருவம் அமர்ந்த திருக்கோலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
தனித்தனியே பிரிந்திருக்கும் விரல்களைக் கொண்ட அழகான கை, கை ரேகை, விரலின் நகங்கள், காலில், முழங்காலில், கைகளின் பின்பக்கம் ஆகிய இடங்களில் புடைத்திருக்கும் நரம்புகள், தாயார் கௌசல்யா கட்டிய ரட்சை, மச்சம், வீர வடுக்கள்... ஆஹா... கண்களையும் மனதையும் விட்டு அகலா வண்ணம் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அற்புதமான திருவுருவம்!
இடக்கரத்தில் வில்லும், வலக்கரத்தில் ராமரஸம் - பாணத்தில் எழுத்துக்கள் இருக்கும். வழக்கமாக ராமரின் கையில் அர்த்த சந்திர வடிவத்தில் பாணம் இருக்கும்.
மூன்று நிகழ்ச்சிகளின்போது மட்டும்தான் ராமரஸத்தைப் பயன்படுத்தியதாக ராமாயணம் தெரிவிக்கின்றது. (ராமரஸம் பயன்படுத்தப்பட்ட மூன்று நிகழ்ச்சிகள்)
ஜானகிக்கு கொடுமையிழைத்த காகசுரனை தண்டிக்க, வாலியை வதைக்க மற்றும் ராவணனை அழிக்க.
ராமருடன் இருப்பவர்களில் - லட்சுமணன் முகம் சற்று கடுகடுப்பாகவும், நிலம் நோக்கும் பார்வையுடன் சீதா பிராட்டியும், தாஸானுபாவத்தில் ஹனுமனும் காட்சி தருகின்றனர். ராமனின் ஆக்ஞையை ஏற்கும் தோரணையில் தோளில் கதையுடன் காட்சி தருகிறார்.
முன்மண்டபத்தில் கூப்பிய கரங்களுடன் பெரிய திருவடி எழுந்தருளியிருக்கிறார். இவருக்கு உளுந்தினால் செய்த மோதகம் மற்றும் சுண்டல் நைவேத்யம் செய்து பிரார்த்தித்துக் கொண்டால் ராகு - கேது தோஷம் விலகுவதாக பட்டாச்சார்யார் தெரிவிக்கிறார்.