நான்கு வேதங்களும் இவ்விறைவனை வழிபட்டு வந்தனர். மறைகள் பூஜித்து பேறு பெற்ற இடம் என்பதால் மறைக்காடு எனப் பெயருற்றது. வடமொழியில் வேதாரண்யம் என்கின்றனர். கலியுகம் பிறந்ததும் வேதங்கள் இங்கிருக்க பிடிக்காமல் பிரதான வாசலை அடைத்துவிட்டு சென்று விட்டன என்றும் இதனால் இறைவனை வழிபட வந்தவர்கள் அனைவரும் பக்கத்திலுள்ள திட்டி வாசல் வழியே உள் சென்று வழிபட்டனர் எனவும் ஸ்தல வரலாறு.
வேதங்கள் பூஜித்து திருக்காப்பு செய்த இவ்வாலயத்து கதவுகள், பல காலமாகத் திறக்கப்படாமலேயே இருந்து வந்தன. அர்ச்சகர்கள் வேறு வாசல் வழியாகப் போய் இறைவனுக்கு பூஜை செய்து வந்தனர். இதை கேள்வியுற்ற அப்பரும் ஞான சம்பந்தரும் இத்தலம் வந்தனர்.
பண்ணினேர் மொழியாள் உமை பங்கரோ எனத் தொடங்கி அப்பர் பாடிய பாடலுக்கு செவி சாய்த்த இறைவன், மூடிய கதவுகள் திறக்க வழி செய்தார். கதவந் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே என்று முடிவுறும் பாடலை ஞானசம்பந்தர் பாடியதும் திறந்த கதவுகள் மீண்டும் மூடிக் கொண்டன. அன்று முதல் கதவுகள் திறப்பதும், அடைப்பதுவுமாகவே இருந்து வருகிறது எனக் கூறப்படுகிறது.
ராவணனைக் கொன்ற பாவம் தீர, ஸ்ரீ ராமர் இத்தலத்தில் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இங்குள்ள வீரஹத்தி விநாயகரை வழிபட்ட பின்னரே, ராமரைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியதாக வரலாறு. இத்தலத்தில் மணல் எல்லாம் லிங்கங்களாகவும் ஜலமெல்லாம் தீர்த்தமாகவும் போற்றப்படுகின்றன.
விடங்கர்:
டங்கம் என்றால் உளி, விடங்கம் என்றால் உளி தீண்டாமல் உருக் கொண்டவர் எனப் பொருள்.
புத்திரப்பேறு வேண்டி, திருமால் - ப்ருகு மகரிஷியின் யோசனைப்படி, சோமாஸ்கந்தரை வழிபட்டு வந்தார்.
ஒரு க்ஷணமும் பிரியாது, சோமாஸ்கந்தரை பூஜித்து வந்தார் திருமால்.
புத்திர பாக்யம் வேண்டி திருமாலிடம் வந்த இந்திரனுக்கு தான் வழிபட்டு வந்த சோமாஸ்கந்தரை தந்தருளினார் திருமால். வாலாசுரன் எனும் அசுரன் தேவர்களை எல்லாம் வென்று தேவேந்திரனை போருக்கழைத்தான். இந்திரனால் அவனை வெல்ல முடியாமல் போனதால், வியாழனின் யோசனைப்படி, முசுகுந்த சக்ரவர்த்தியின் உதவியை நாடினான். எதற்கும் அஞ்சாத முசுகுந்தன் போரில் வாலாசுரனை தோற்கடித்து வெற்றி கொண்டான். வெற்றி பரிசாக திருமாலிடமிருந்து பெற்ற சோமாஸ்கந்தரை கேட்டான்.
அதை தர மனமில்லாத தேவேந்திரன், மயனின் உதவியுடன், அதைப் போலவே ஆறு மூர்த்திகளை உருவாக்கி, திருமாலிடமிருந்து பெற்றதையும் சேர்த்து, ஏழு மூர்த்திகளை, முசுகுந்தனிடம் காண்பித்து இந்த ஏழு திருவுருவங்களில் நீ வேண்டுவது யாது எனக் கேட்டான்.
சிறந்த சிவபக்தனான முசுகுந்தனிடம், இறைவனே - இதனைக் கேள் என சுட்டிக் காட்டினார். இறைவனின் வழிகாட்டுதலால் சரியான மூர்த்தியை அடையாளம் காண்பித்த முசுகுந்தனின் அறிவாற்றலைக் கண்டு வியந்த இந்திரன், மயன் மூலமாக உருவாக்கிய ஆறையும் சேர்த்து ஏழு மூர்த்திகளையுமே முசுகுந்தனுக்கு பரிசாக தந்து விட்டான்.
இதுவே சப்த விடங்கர்கள் உருவானதிற்கான புராண குறிப்புகள்.
பார்வதி-பரமேஸ்வர கல்யாணத்திற்கு வந்த கூட்டத்தின் காரணமாக வடதிசை தாழ்ந்து, தென்திசை உயரவே, பூமியை சமநிலைப் படுத்த அகஸ்தியரை தென் திசைக்கு அனுப்பினார் சிவபெருமான். திருமணத்தை தம்மால் பார்க்க முடியாமல் போனதற்கு வருந்திய அகஸ்தியரிடம், வேதாரண்யத்தில் மணக் கோலத்தை காட்டுவதாக வாக்களித்திருந்தார் சிவபெருமான். அதன்படி இங்கு மணக்கோலத்தில் தரிசனம் தருவதாக ஸ்தல வரலாறு.
இவ்வாலயத்தில் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கிலுள்ள நெய்யை உண்ணுவதற்கு ஓர் எலி வந்தது. அணையும் நிலையிலிருந்த திரியின் சுடர், எலியின் மூக்கில் படக் கனன்று தூண்டத் தீபம் பிரகாசமாக எரிந்தது. தீபம் மங்கும் சமயத்தில் எலி செய்த இக்காரியத்தின் பயனாக அந்த எலி மறுபிறப்பில், இறைவனின் பேரருளால், மூவுலகும் ஆளும் மாபலி சக்ரவர்த்தியாக பிறந்தது.
திருவிளையாடற் புராண ஆசிரியரான பரஞ்சோதி முனிவரும், தாயுமானவரும் இவ்வூரில் பிறந்தவர்கள். சுதந்திர இயக்கத்தின் உப்பு சத்யாக்கிரகம் நடந்த இடமாக சரித்திரம் படைத்த ஸ்தலம் வேதாரண்யம்.
ஸ்தல விருட்சமான வன்னி மரத்தடியில் விஸ்வாமித்ரர் தவம் செய்து பிரம்மரிஷி பட்டம் பெற்றார் எனக் கூறுகின்றனர். யாக்ஞவல்கியரும் மைத்ரேயியும் அறிவொளி பெற்றதும் இந்த மரத்தடியில் என்கின்றனர். வேதாரண்யம் விளக்கழகு எனும் உலக வழக்குள்ளது.
சப்த விடங்க ஸ்தலங்களுள் ஒன்று - தேவாரத்திருத்தலம் - சக்தி பீடங்களுள் ஒன்று.