சிவ கடாட்சம் பெற ஏதுவான ஸ்தலம் எதுவென பிரம்மனிடம் உரோமச மகரிஷி கேட்கிறார். பிரம்மா ஒரு தர்ப்பையை பந்தாக சுருட்டி வீசினார். அது இங்குள்ள பிரம்மாரண்ய நதிக்கரையில் வந்து விழுந்தது. அந்த இடத்தை தேர்ந்தெடுத்து, ரோமச மகரிஷி தவம் செய்யலானார். இவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் மகரிஷிக்கு பிரத்யட்சமானார். தனக்கென்று வரம் ஏதும் கேளாமல், இத்தலத்தில் அருள்பாலிக்க வேண்டுமென ரோமச மகரிஷி கோரினார்.
காகபுஜண்டர் - வகுளா தேவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்து, பதினெண் சித்தர்களில் ஒருவராகவும், மகரிஷியாகவும் வாழ்ந்த ரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் வரமூர்த்தீஸ்வரர்.
பிரம்மா அரணிக்கட்டையை கடைந்தபோது தோன்றிய அரணி நதிக்கரையில், கிருஷ்ணர் அஸ்வத்த மரமாக நிற்கிறார்.
அத்ரி முனிவரின் புத்திரனான முகுந்த முனிவரும் இத்தலத்தில் தவம் புரிந்தார். அரணி நதிக்கரையில் கால பைரவர் வடிவில் பிரத்யட்சமாகி தரிசனம் தந்த இவரை வழிபடுவோரை காலனின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டுமென முகுந்த முனிவர் வேண்டினார்.
விருத்தாசுரனைக் கொன்றதால் இந்திரன் பிரம்மஹத்தி தோஷம் கொண்டான். இவ்விறவனை வழிபட்டு தான் கொண்ட தோஷங்களை போக்கிக் கொண்டான்.
ஆயுளுடன் வாழ வழி காட்டும் அரன் உறையும் ஸ்தலம் என்பதால், அரியதுறை எனப் பெயர் கொண்டதாக ஒரு குறிப்பு தெரிவிக்கின்றது.
இது பஞ்ச பிரம்ம ஸ்தலங்களுள் ஒன்றாகும்.