தக்கனின் 27 பெண்களை மணந்த சந்திரன், அவர்களுள் ரோஹிணியிடம் மட்டுமே அதிக பிரியம் கொண்டு மகிழ்ந்திருந்தான் என்பதனால், மற்றைய 26 பெண்களும் தக்கனிடம் முறையிட்டனர். இந்த செய்கைக்கு காரணமாயிருந்த சந்திரனின் அழகு தொலையட்டும் என சபித்து விடுகிறான் தக்கன். அந்த சாபத்திலிருந்து விடுபட பல ஸ்தலங்களுக்கு சென்று வந்த சந்திரன் இத்தலம் வந்து வழிபட்டதும், வரதராஜராக சேவை சாதித்த பெருமாள் அவனது நோய் தீர அருளினார் என ஸ்தல வரலாறு.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - நாங்கூர் திவ்ய தேசங்களுள் ஒன்று.
ஏகாதச ருத்ர பீடங்களுள் - பாசுபத பீடம்் மூலவர்: நயனார்ப்பணேஸ்வரர் (மேலத்திருநாங்கூர்).
11 திவ்ய தேச ஸ்தலங்கள் தோன்றிய வரலாறு:
சிவபெருமானை யாகத்திற்கு அழைக்காமலும், யாகத்தின் அவிர்பாகத்தை தராமலும், அவமானப்படுத்தி தட்சன் செய்யும் யாகத்திற்கு அழைப்பின்றி பார்வதி சென்றாள். எவ்வளவு அறிவுரைகள் கூறியும், காதில் வாங்கிக் கொள்ளாமல் செருக்குடன், யாகத்தைத் தொடர்ந்து நடத்தினான் தட்சன். யாகத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், யாக குண்டத்தில் குதித்து, தன் ஸ்தூல உடலை அழித்துக் கொண்டாள் பார்வதி.
நடந்தவைகள் அனைத்தையும் அறிந்து கொண்ட சிவபெருமான் ஆவேசம் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். உக்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கையில், அவரது ஜடாமுடி தரையில் பட்டு, அதிலிருந்து ஒரு சிவன் தோன்றி, ருத்ர தாண்டவம் ஆடினார். இவ்வாறாக மூலசிவனின் ஜடாமுடி தரையில் படும் போதெல்லாம் ஒரு சிவன் தோன்றி ருத்ர தாண்டவம் ஆட, முடிவாக 11 ருத்ரமூர்த்திகள் ஆடிக் கொண்டிருந்தனர்.
11 சிவ வடிவங்கள் கோபாவேசமாக ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தால் உலகிற்கு அழிவு என கலக்கமுற்றுப் பயந்த முனிவர்கள், திருமாலை சரண் அடைந்தனர். திருமாலும் 11 வித வடிவங்களில் தோன்றி, 11 சிவ தாண்டவர்கள் முன் நின்று, அவர்களை சாந்தப்படுத்தினார் என ஸ்தல வரலாறு.
சினம் தணிந்த சிவபெருமான், ஒவ்வொரு வடிவத்தையும் - ஒருவருக்குள் ஒருவராக செலுத்தி, இறுதியில் ஒரே வடிவமாக நின்றார். தன்னைப் போலவே ஏகாதச வடிவங்கள் கொண்டு திருமாலும் எழுந்தருள வேண்டுமென சிவன் கோரியதால், இத்தலத்தில் 11 பெருமாள்களாக திருமால் சேவை சாதிக்கின்றார் என ஸ்தல வரலாறு.