பரத்வாஜ முனிவர் வலியன் எனும் கருங்குருவி வடிவில் இத்தலத்து இறைவனை வழிபட்டதால், இவ்வூருக்கு 'வலிதாயம்' எனப் பெயர் வந்தது.
ஆதியில், போர் படைக்கருவிகளை பத்திரப்படுத்தி வைக்கும் இடமாக இருந்ததால், 'படைவீடு' என்றழைக்கப்பட்டு, பின்னர் இந்நாளில் 'பாடி' என அழைக்கப்படுவதாக கூறுவர். நான்கு பேர்கள் பாடியதால் 'பாடி' எனப் பெயர் கொண்டதாகவும் கூறுவர்.
பிரம்ம புத்ரிகளான கமலை - வல்லி ஆகிய இருவரும் சிவபூஜை செய்ததன் பலனாக, விநாயகப் பெருமான் அவர்களை இத்தலத்தில் மணப்பதாக ஐதீகம்.
வியாழ பகவான், தனது அண்ணன் உதத்தியர் மற்றும் அவர்தம் மனைவியான மமதை ஆகியோருடன் இருக்கையில், கருவுற்றிருந்த மமதையிடம் தகாது நடந்து கொண்டார். கருவை காப்பாற்ற சிவபெருமானை வேண்டினாள் மமதை.
தீர்க்கதன் எனும் குழந்தை பார்வையற்றவனாகப் பிறந்தது.
செய்த பிழைக்கு பிராயச்சித்தம் வேண்டிய வியாழன், மார்க்கண்டேய ரிஷியின் யோசனைப்படி, இத்தலம் வந்து, தவமிருந்து, இவ்விறைவனை வழிபட்டு, தனது பாவம் நீங்கப் பெற்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
இழந்த பெருமைகளை வியாழன் இத்தலத்தில் மீண்டும் பெற்றதால் இது ஒரு குரு ஸ்தலமாக விளங்குகிறது.