நவநிதிகளின் அதிபனான குபேரன், சிவதரிசனத்திற்காக கயிலாயம் சென்றபோது, உமையவளை காமக் கண்ணோடு பார்த்ததால், பார்வதியின் கோபத்திற்காளாகி, நவநிதிகளையும் ஒரு கண்ணையும் இழந்தான். சாப விமோசனம் தேடி பூலோகம் வந்தான் குபேரன்.
அளகாபுரியின் அதிபரான குபேரன் அங்கு இல்லாததால், நவநிதிகளும் கோளூர் வந்து தாமிரபரணியில் நீராடி, எம்பெருமானை நோக்கி தவமிருந்தன. தவத்தினால் மகிழ்ந்த எம்பெருமான், அவர்களை அனுக்ரஹித்து, அவர்கள் வேண்டிக் கொண்டபடியே, நவநிதிகளையும் தன்னுடன் வைத்துக் கொண்டு அதன் மீது சயனம் கொண்டார். இதனால் வைத்தமாநிதிப் பெருமாள் என்ற திருநாமம் கொண்டார்.
உமையவளின் சொல்படி திருக்கோளூர் வந்தடைந்த குபேரனும், எம்பெருமானை வழிபட்டு, நிதிகளை திரும்பத் தர வேண்டி நின்றான். அதற்கு எம்பெருமான், "செல்வம் யாவையும் இப்போதே உனக்குத் தர முடியாது. கொஞ்சம் பாகம் தருகிறேன், பெற்றுக் கொள்" என்றார். அவரிடமிருந்து கொஞ்சம் செல்வங்களைப் பெற்றுக் கொண்டு அளகாபுரியை அடைந்தான் குபேரன் என வரலாறு.
தொடர்ந்து ஒரே நபரிடம் செல்வங்கள் நிலைத்து இருக்கலாகாது, சுழன்று கொண்டே இருக்க வேண்டும் என்பது பெருமாளின் அனுக்ரஹம். தர்மதேவன் இங்கேயே தங்கி பெருமாளை வழிபடுவதாக ஐதீகம். அதர்மத்தை விரட்டி விட்டதால், இத்தலத்திற்கு அதர்ம பிசுனம் என்ற பெயரும் உண்டு.
மாசி மாத சுக்ல பட்ச துவாதசியன்று தாமிரபரணியில் நீராடி வைத்தமாநிதி பெருமாளை வழிபடும் சேவார்த்திகளுக்கு வாரி வழங்கவே மரக்காலை தலைக்கு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சுவர்த்தனின் மகனான தர்மகுப்தன் என்பவன், தனது ஏழ்மையைப் போக்க வழி சொல்லுமாறு பரத்வாஜ முனிவரிடம் விண்ணப்பித்தான். அவனது முந்தைய ஜென்மத்தில் யாருக்கும் உதவாது செல்வங்களைப் பூட்டி வைத்திருந்தான் என்பதை அவனுக்கு சுட்டிக் காட்டிய முனிவர், முன் ஜென்ம பாவங்களைப் போக்க வைத்தமாநிதி பெருமாளை வழிபடுமாறு சொன்னார்.
அவரின் உபதேசப்படி இத்தலத்திற்கு வந்த தர்மகுப்தனும் பெருமாளை வழிபட்டு செல்வங்கள் கிடைக்கப் பெற்றான் என ஸ்தல வரலாறு.
மதுரகவி ஆழ்வார் திருக்கோளூரில் முன்குடுமி பிராமண வருணத்தில் பிறந்தார். வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமை பெற்று இந்தியா முழுவதும் சென்று ஆன்மீகப் பணியாற்றினார். பின்னர் தமது ஊரின் அருகேயே ஆழ்வார் திருநகரியில் ஜோதி இருப்பதை அறிந்து அங்கே சென்று புளியாழ்வாரிடம் (நம்மாழ்வாரிடம்) ஞான உபதேசம் பெற்றார் எனக் கூறப்படுகிறது.