ஸ்தல வரலாறு: சுவாமியின் மழு (கோடரி) நர்த்தனமாடிய ஸ்தலம் என்பதால் 'மழுவாடி' எனப் பெயர் கொண்டிருந்தது. பின்னர் மருவி 'மழபாடி' என்றானது. சோழர் காலத்தில் சேரர்களின் ஒரு பிரிவான மழவர்கள் பாடி (பாசறை) அமைத்துக் கொண்டிருந்த ஸ்தலம் என்பதால் 'மழபாடி' என்றானதாகவும் கூறுவர்.
பிரம்ம தேவர் வழிபட்டுக் கொண்டிருந்த சிவலிங்கத்தை, பிரம்ம லோகத்திலிருந்து புருஷா மிருகம் இத்தலத்திற்கு எடுத்துக்கொண்டு வந்து, பிரதிஷ்டை செய்து பூஜித்து வழிபட்டுக் கொண்டிருந்தது. இதில் உடன்பாடில்லாத பிரம்ம தேவர், இத்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு செல்ல முற்பட்டார்.
எவ்வளவு முயன்றும் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முடியவில்லை. 'இது வைரத் தூண் போல நிலை கொண்டுவிட்டதே' என ஆச்சரியப்பட்டுப் போனார் பிரம்மன். இதனால் இறைவன் 'வஜ்ரஸ்தம்பேஸ்வரர்' எனும் திருநாமம் கொண்டார். சுந்தரர் திருவாலம்பொழிலில் தங்கியிருந்தபோது அவரது கனவில் தோன்றிய இறைவன், 'மழபாடிக்கு வர மறந்தனையோ?' என வினவினாராம். உடனே விரைந்து இத்தலம் வந்த சுந்தரர், இவ்விறைவனைப் போற்றி 'பொன்னார் மேனியனே' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
வியாக்ரபாதரின் புதல்வியும், உபமன்யுவின் தங்கையுமான ஸ்வயம்பிரபை எனும் சுயசாம்பிகைக்கும், நந்தியம்பெருமானுக்கும் திருமணம் நடந்த ஸ்தலம் இது. பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் நடைபெற்ற இத்திருமணத்தை திருவையாற்று இறைவன் ஐயாறப்பரும் தர்மசம்வர்த்தினியும் நடத்தி வைத்தனர்.
நந்தியம்பெருமான்: துர்வாச முனிவரின் சீடரான சிலாத முனிவரும் அவரது மனைவி சாருலட்சணையும் குழந்தைப் பேறு வேண்டிப் பிரார்த்தித்தனர். புத்திர பாக்கியம் வேண்டி ஐயாறப்பரை நோக்கி தவமிருந்தார் சிலாத முனிவர். புத்திர காமேஷ்டி யாகம் ஒன்றையும் செய்தார். யாகத்தை முடித்து பின் பூமியை உழுதால் ஒரு பெட்டி கிடைக்கும், அதில் ஒரு குழந்தை இருக்கும், அந்தக் குழந்தை 16 வயது வரையே வாழும் என்று அசரீரி ஒலித்தது. அதன்படியே சிலாத முனிவருக்கு ஒரு செப்புப் பெட்டி கிடைத்தது - அதில் குழந்தையும் இருந்தது. அந்தக் குழந்தைக்கு செப்பேச்வரன் எனப் பெயரிட்டு ஆசையாக வளர்த்தார். புராண சாஸ்திரங்கள் மற்றும் அனைத்து வித்தைகளிலும் தேர்ச்சி பெற்றான் செப்பேச்வரன். செப்பேச்வரனுக்கு 14 வயது நிரம்பியதும், 'இன்னும் இரண்டு ஆண்டுகளில் நம் குழந்தை நம்மை விட்டுப் பிரிந்து விடுவானே' என்ற கவலை சிலாத முனிவரைப் பற்றிக்கொண்டது. பெற்றோரின் கவலையைப் போக்கி அவர்களை மகிழ்விக்க எண்ணிய செப்பேச்வரன், ஐயாறப்பர் கோவில் வந்து சூரிய புஷ்கரிணியின் மத்தியில் நின்று கொண்டு ஐயாறப்பரை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டார்.
நீர் வாழ்வன சூழ்ந்து அவனது உடலை அரித்து எலும்புக்கூடாக்கி விட்டது. அவனது தவத்தை மெச்சி பிரத்யட்சமான இறைவன், பழைய உடலைத் தந்தருளி அவனுக்கு அருளாசி வழங்கினார். அவனுக்கு உபதேசங்களைச் செய்து, சிவ கணங்களுக்குத் தலைவனாக்கினார் சிவபெருமான். கைலாசத்தின் முதல் வாயிலைக் காக்கும் பொறுப்பையும் தந்தருளினார். இதனால் செப்பேச்வரன் 'நந்தியம் பெருமான்' என்ற பெயர் கொண்டார்.
திருமழபாடியில் வாழ்ந்து வந்த, வசிஷ்டரின் பேத்தியும், வியாக்ரபாதரின் மகளும், உபமன்யுவின் தங்கையுமான சுயம்பிரகாசை என்பவளை, நந்தியம்பெருமானுக்குத் திருமணம் செய்து வைத்தார் ஐயாறப்பர். இந்தத் திருமண வைபவத்தையே இன்றைக்கும் சப்த ஸ்தான திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.
பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் நடைபெற்ற இத்திருமணத்தை திருவையாற்று இறைவன் ஐயாறப்பரும் தர்மசம்வர்த்தினியும் நடத்தி வைத்தனர்.
நந்தி கல்யாணம்: சப்த ஸ்தான ஸ்தலங்கள் எனப்படும் ஏழு ஊர்கள் சேர்ந்து நடத்தும் இத்திருமணம் ஐந்து நாட்களுக்குக் கோலாகலமாகத் திருமழபாடியில் நடக்கும். விரதத்தில் தொடங்கி கட்டுசாதக் கூடை வரை நடைபெறும் இத்திருமணத்தைக் காண ஊரே திரண்டு நிற்கும்.
கல்யாணம் நடக்கும் ஐந்து நாட்களும் இவ்வூரிலுள்ளோர், அவரவர் வீடுகளின் முன்பாகப் பந்தல் அமைத்து, தோரணங்கள் கட்டி, கோலம் போட்டு, புது மணத் தம்பதிகளை வரவேற்பர். 'நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்' என்பதற்கேற்ப, இத்திருமணத்தைப் பார்ப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். ஊர் மக்கள் திரளாகக் கலந்துகொள்வார்கள்.
திருவையாறு மற்றும் அதன் அருகேயுள்ள திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருவேதிக்குடி, திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஊர்களே சப்த ஸ்தான ஸ்தலங்கள்.
சப்த ஸ்தான ஸ்தலங்கள் நடத்தும் இத்திருமண வைபவத்திற்கு - திருப்பழனத்திலிருந்து பழ வகைகளும், திருச்சோற்றுத்துறையிலிருந்து அரிசி போன்ற உணவு வகைகளும், திருவேதிக்குடியிலிருந்து வேதியர்களும், திருக்கண்டியூரிலிருந்து அணிகலன்களும், திருப்பூந்துருத்தியிலிருந்து மலர்களும், திருநெய்த்தானத்திலிருந்து நெய்யையும் அனுப்பி வைப்பார்களாம்.
திருமண விழா முடிந்ததும் அதன் தொடர்ச்சியாக, தம்பதியினர் சிறிய வெட்டிவேர் பல்லக்கில் பவனி புறப்படுவார்கள். இதை 'மாப்பிள்ளை பல்லக்கு' என்பார்கள். ஐயாறப்பரும் தர்மசம்வர்த்தினியும் அழகிய கண்ணாடிப் பல்லக்கில் உடன் செல்வார்கள். இதை 'பெரிய பல்லக்கு' என்பார்கள். இந்த இரண்டு பல்லக்குகளும் ஒவ்வொரு ஊராக ஏழு ஊர்களுக்கும் போகும். அந்தந்த ஊரைச் சேர்ந்த சுவாமியும் - அம்பாளும் இவர்களுடன் சேர்ந்து கொண்டு அவரவர் பல்லக்கில் புறப்பட்டுப் பவனி வருவார்கள். இதையே 'சப்த ஸ்தான பல்லக்கு விழா' என்பார்கள். இது ஒரு தேவாரத் திருத்தலம்.