ஊருக்கு வெளியே அரை கி.மி தூரத்தில் வெட்டாறு ஓடுகிறது. நான்கு பக்கங்களிலும் பசுமையான வயல்கள், நீர் நிலைகள், கோவில்கள் நிறைந்த அழகிய கிராமம். ஸ்ரீராமர் அணிலின் முதுகில் மூன்று கோடுகள் போட்டது போல் மூன்று அக்ரஹாரத் தெருக்கள் கொண்ட கிராமம்.
16ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள், 500 ப்ராம்மணர்களுக்கு தானமாக வழங்கிய கிராமம் எனக் கூறப்படுகிறது. இயல், இசை, நாடக பயிற்சி செய்வதற்காக வழங்கப்பட்டதாம்.
மெலட்டூரில் நடக்கும் பாகவத மேளா மிகவும் பிரபலமானது. தியாகராஜ ஸ்வாமிகள் காலத்து வெங்கடராம சாஸ்திரிகள் உருவாக்கிய நாட்டிய நாடகம் - ஒரு வாரம் வரை நடத்துகின்றனர்.
ப்ரஹ்லாத சரித்திரம், நரசிம்ம ஜெயந்தி, வெங்கடரமண மகாத்மியம், ருக்மணி கல்யாணம் ஆகிய நாட்டிய நாடகங்கள் மிகவும் பிரபலமானவை.