விண்ணகரம் என்றால் விஷ்ணு கிரகம். காழிச்சீராம விண்ணகரம் என்றால் ஸ்ரீ ராமபிரான் கோவில் கொண்டுள்ள விஷ்ணு கிரகம் எனப் பொருள்.
தனக்கு மட்டும் நீண்ட ஆயுள் இருப்பது குறித்து மிகுந்த கர்வம் கொண்ட பிரம்மனின் செருக்கை அடக்க எண்ணினார் திருமால். அதே சமயத்தில் பூலோகத்தில், இத்தலத்தில், உரோமச முனிவர் என்பவர் தமக்கு நீண்ட ஆயுள் வேண்டி தவம் இருந்தார். பிரத்யட்சமான பெருமாள் வேண்டுவது யாதெனக் கேட்க, 'தாம் இந்த உடம்புடனே நீண்ட காலம் வாழ்ந்து தங்களை வழிபட வேண்டும்' என்று கோரினார் முனிவர்.
முனிவர்க்கு பல கோடி பிரம்மாக்களின் ஆயுளை வழங்கினார் திருமால். பிரம்மாவின் கர்வமும் அடங்கியது. உரோமச முனிவரின் மற்றொரு வேண்டுகோள் - உலகளந்த விஸ்வரூப கோலத்தை காண வேண்டுமென்பது. அந்த ஆசையையும் நிறைவேற்ற, திரிவிக்ரமனாக சேவை சாதித்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சமணர்களின் ஆதிக்க காலத்தில் இக்கோவிலில் வழிபாடு இல்லாமல் இருந்த சமயத்தில், இவ்ஊரிலுள்ள ஒரு கிழவி வீட்டில் விக்ரஹங்கள் பாதுகாப்பாக, தவிட்டுப் பானைக்குள் வைக்கப்பட்டிருந்ததாம்.
இவ்ஊரில் விஷ்ணு கோவிலே இல்லை என இங்கு செல்ல மறுத்த திருமங்கை ஆழ்வாரிடம், கிழவியின் வீட்டில் விக்ரஹங்கள் இருப்பதை ஊர் மக்கள் தெரிவித்தனர். அந்த மூர்த்திகளை வெளிக்கொணர்ந்து பிரதிஷ்டை செய்து, வழிபாட்டை மீண்டும் துவக்கி வைத்தார் எனக் கூறப்படுகிறது. இதனால் 'தவிட்டுப்பானை தாடாளன்' என்ற திருநாமமும் உண்டு.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - சப்த ராம க்ஷேத்திரங்களுள் ஒன்று - ஐந்து விண்ணகரங்களுள் ஒன்று.