இவ்வூரில் பிறந்த புகழ்த்துணை நாயனார், இறைப்பணி செய்து வந்தார். இவ்வூரில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக வறுமையில் உழன்று பசியால் வாடலானார். முதுமை, தள்ளாமை இவற்றால் வேறு அல்லல்பட்டார். இருப்பினும் தான் செய்து வந்த தொண்டினை விடாது செய்து வந்தார்.
ஒரு நாள் குடத்தில் நீர் எடுத்து வரும்போது மயக்கம் வந்தது. அதை பொருட்படுத்தாமல் குடத்தைத் தூக்கியதும், குடம் நழுவி ஸ்வாமியின் திருமுடியின் மீது விழுந்தது. இதனால் ஸ்வாமியின் சிரசில் தழும்பு உண்டானது.
"சிவபெருமானுக்கு அபச்சாரம் செய்து விட்டேனே" என கதறிக்கொண்டு மூர்ச்சையானார். அன்றிரவு நாயனாரின் கனவில் தோன்றிய சிவபெருமான், பஞ்சம் நீங்கும் வரை இவரது வறுமையைப் போக்க தினமும் ஒரு பொற்காசை பீடத்துப் படியில் வைப்பதாகக் கூறினார். அவ்வாறே தினமும் ஒரு பொற்காசு தந்ததால், ஸ்வாமிக்கு படிக்காசு நாதர் என்ற பெயர் வந்தது. புகழ்த்துணை நாயனார் பிறந்து வளர்ந்து முக்தி பெற்ற ஸ்தலம் இது.
கோச்செங்கட் சோழன் கட்டிய 78 மாடக் கோவில்களுள் இதுவும் ஒன்று. 2000 வருடங்களுக்கு முற்பட்ட கோவில் என்பார்கள்.
புகழ்த்துணை நாயனாரின் வாரிசுகளே தற்போது அர்ச்சகராக இருக்கின்றனர் என ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.
இது ஒரு தேவாரத்திருத்தலம்.