தனது அழகின் மீது கர்வம் கொண்ட பிரம்மா, சுந்தரராஜப் பெருமாளின் அழகைக் கண்டு வியந்து கர்வம் நீங்கப் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. பிரம்மாவின் வேண்டுதலுக்காக, அவர் கோரியபடி இங்கு மஹாவிஷ்ணு எழுந்தருளினார் என்பர். பிரம்மாவிடம் அன்பு கொண்டு இங்கு எழுந்தருளியதால், இவ்வூர் அன்பில் எனப் பெயர் கொண்டது.
சுதபா எனும் முனிவர் தண்ணீருக்கடியில் அமர்ந்து தவம் மேற்கொண்டிருந்தார். அவரைக் காண வந்த துர்வாசர், முனிவர் தண்ணீரிலிருந்து வெளி வர காத்திருந்தார். நீண்ட நேரம் காத்திருந்தும் வெளியே வராததால், 'தண்ணீரிலே வாழும் தவளையாகக் கடவாய்' என சபித்து விடுகிறார். சாபம் பெற்றதும் சுதபா முனிவர் மண்டூக முனிவர் எனப் பெயருற்றார். சாப விமோசனம் வேண்டி நின்ற சுதபாவை, அன்பில் எனும் க்ஷேத்ரத்திற்கு போகுமாறு பணிக்கிறார் துர்வாசர். இத்தலம் வந்து, இங்குள்ள தீர்த்தத்தில் தவம் மேற்கொண்ட மண்டூக மகரிஷிக்கு சுந்தரராஜனாகக் காட்சி தந்த மஹாவிஷ்ணு, அவர் கொண்ட சாபத்தை நீக்கியருளினார் என ஸ்தல வரலாறு.
துர்வாசரிடமிருந்து சாபத்தைப் பெற்ற மண்டூக மகரிஷியின் சாபத்தை நீக்கியருளிய ஸ்தலம் இது.
'அன்பிலாதாரிடத்து அன்பிலாதவனும், அவனிடத்து அன்பு கொள்பவரிடம் அன்பைப் பொழிந்து முக்தி அளிப்பவனும் அன்பில் எனும் இடத்தில் இருக்கின்றான்' என்று குறிப்பிட்டுள்ளார் ஒரு கவிராயர்.
உத்தமர் கோவிலில் விடிவு கிட்டியதும், சிவபெருமான் முதன் முதலில் சந்தோஷமாக வந்து வழிபட்ட ஊர் அன்பில் என்கிறது ஒரு குறிப்பு.
கணிகை சிலம்பி எனும் பெண்மணி கம்பரிடம் ஒரு பாடலைக் கேட்டாளாம். அவரோ ஆயிரம் பொன் தந்தால் பாடல் தருகிறேன் என்றாராம். தனது உடமைகளை எல்லாம் விற்று 500 பொன் திரட்டி கம்பரிடம் கொடுத்துள்ளாள் அந்தப் பெண். பாதிப் பாடலை தந்துவிட்டு சென்றாராம் கம்பர். கம்பர் தந்த அந்த பாதிப் பாடலை தனது வீட்டு திண்ணை சுவற்றில் எழுதி வைத்தாளாம் அந்தப் பெண்.
சிறிது காலம் கழித்து அவ்வை மூதாட்டி இவ்வூருக்கு வந்தபோது, இவளது வீட்டு திண்ணையில் இளைப்பாறினார். பாதிப் பாடலை சுவற்றில் பார்த்துவிட்டு, நடந்தவற்றை கேட்டறிந்து மீதிப் பாடலை முடித்துக் கொடுத்தார் என்ற செவி வழிக் கதை ஒன்று உள்ளது. (கம்பர்) 'தண்ணீரும் காவிரியே, தார் வேந்தன் சோழனே, மண்ணாவதும் சோழ மண்டலமே' (அவ்வை) 'பெண்ணாவாள் அம்பர் சிலம்பி, அரவிந்தத் தாளணியும் செம்பொற் சிலம்பே சிலம்பு'
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.