மேரு முதலான எட்டு வகையான சிகரங்களுள் முதன்மையானது சதுரகிரி. கிழக்கே இந்திரகிரி, மேற்கே வருணகிரி, வடக்கே குபேரகிரி, தெற்கே எமகிரி என நிற்கும் மலைகளின் நடுவே இருக்கும் சிவகிரி, பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சித்தர்கிரி ஆகியன எனவும், ஹனுமன் தூக்கி சென்ற சஞ்சீவி மலையின் ஒரு பகுதி இங்கே வீழ்ந்ததாகவும் ஸ்தல புராணம் விவரிக்கின்றது.
சித்தர் பூமி எனவும் மூலிகை மலை எனவும் அழைக்கப்படுகிற சதுரகிரிக்கு புனித பயணம் மேற்கொண்டவர்கள் இதை தென் கயிலாயம் என்றே போற்றுகின்றனர்.
உமையவள் கயிலாயத்திற்குச் சென்று, பிரம்மாண்டமான சந்தன மரத்தடியின் கீழ் சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து வழிபடலானாள். சிவலிங்க அபிஷேகத்திற்காக ஆகாய கங்கையை வரவழைத்தாள். அவளது வலம் வரும் தீர்மானத்தில் மகிழ்ந்த இறைவன் அவள் கோரிய வரத்தை அளித்தார். உமையவள் பிரதிஷ்டை செய்த லிங்கமே சந்தன மஹாலிங்கம்.
அகஸ்தியர், நந்தி தேவர், திருமூலர், போகர், கொங்கணவர், மச்சமுனி, கோரக்கநாதர், சட்டைமுனி, சுந்தரநந்தர், ராமதேவரர், குதம்பை சித்தர், கருவூரார், இடைக்காடர், கமலமுனி, வால்மீகி, பதஞ்சலி, தன்வந்த்ரி, பாம்பாட்டி சித்தர் ஆகிய 18 சித்தர்களும் தவமிருந்த மலைப் பிரதேசம். இறைவனின் திருவருளால் இவர்களும் இங்கு சந்நிதி கொண்டுள்ளனர். இவர்களை தரிசிக்கும் பாக்யம் நமக்கும் கிடைக்கின்றது.
மஹா சிவராத்ரி தினத்தன்று மலை முழுவதுமாக பக்தர்கள் கூட்டம் நிரம்பியிருக்கும். நான்கு கால வழிபாடு நடக்கும்.
சிவபெருமானின் அடியவர்களில் ஒருவரான யாழ்வல்லதேவர் பச்சைமால் எனும் ஆயர்குலத்தினனாகப் பிறந்து இப்பகுதியில் பசுக்களை மேய்த்து வந்தார். ஒரு நாள் இங்குள்ள புதருக்குள் இருக்கும் சிவலிங்கத்திற்கு, பசு தானாக பால் பொழிவதை கண்ணுற்றார். தன்னைப் போல் பிறரும் தரிசிக்கும்படி லிங்க வடிவமாய் இங்கேயே எழுந்தருள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கிணங்க தோன்றிய லிங்கமே மஹாலிங்கம். சற்று சாய்ந்த நிலையில் தரிசனம் தருகின்றார்.
பொதிகை மலையின் மூலிகை வளத்தையும் சதுரகிரியின் மகிமைகளையும் காண வந்த அகஸ்தியர், சித்த புருஷரான சுந்தரநந்தரின் வேண்டுகோளுக்காக பிரதிஷ்டை செய்த லிங்கமே சுந்தர லிங்கம் என்பர்.
மலையில் காணப்படும் மூலிகை வகைகள்:
ஆடாதொடை, தூதுவளை, துளசி, கண்டங்கத்திரி, மிளகரணை, அமுக்கிராங்கிழங்கு, நெல்லி, கடுக்காய், தான்றிக்காய், தும்பை, கீழா நெல்லி, நன்னாரி, அருகம்புல், ஆவாரை, ஆடுதீண்டாபாலை, ஊமத்தை, எருக்கு, கட்டுக்கொடி, கரிசிலாங்கண்ணி, மலை வேம்பு, சர்க்கரை வேம்பு, சிறு குறிஞ்சி, வெள்ளை நாகதாளி, கரு நாகதாளி, தலை சுருட்டி, தசை ஒட்டி, கணை எருமை, தொழு கண்ணி, சாயா விருட்சம், கண் கற்றாழை, ஜோதி விருட்சம், ஜோதிப்புல் ஆகியன நிறைந்துள்ளன.
பகல் வேளையில் ஜோதிப்புல்லை தண்ணீரில் நனைத்து வைத்துக் கொண்டு இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போலிருக்குமாம். சித்தர்கள் வெளிச்சத்திற்காக இம்முறையை கையாள்வார்களாம்.
திசைவிரட்டி எனும் தாவரத்தைத் தொட்டுவிட்டாலோ அல்லது அருகே சென்று பார்த்தாலோ, நாம் செல்ல வேண்டிய திசைக்கு எதிர் திசையைக் காண்பித்து, வழி தவறிப் போகச் செய்யுமாம். சில செடிகளால் உடல் அரிப்பு, கண் எரிச்சல் ஆகியன ஏற்படுமாம்.