நாரத மகரிஷியை அவமதித்தான் சலங்கொண்டபுர மன்னன் பகீரதன். வனத்தில் திக்விஜயம் செய்து கொண்டிருந்த கோரன் எனும் அசுரன், நாரதரை சந்தித்து ஆசி கோருகிறான். பகீரதனை வென்றால் உனது திக்விஜயம் பூர்த்தியாகும் என்கிறார் மகரிஷி. அதன்படி கோரன் பகீரதனை வென்றான்.
ராஜ்யத்தை இழந்து நாட்டை விட்டு ஓடிப்போன பகீரதன் துர்வாசரின் ஆலோசனைப்படி, வெள்ளிக் கிழமைகளில் விரதமிருந்து, பாதிரி மரத்தடியிலிருந்த முருகப் பெருமானை வழிபட்டு, இழந்த நாட்டைத் திரும்பப் பெற்றான் என ஸ்தல வரலாறு.
வல்லன் எனும் அசுரனின் தலைநகரமாகவும், கோட்டையாகவும் முன்பொரு காலத்தில் இருந்ததால், 'வல்லன் கோட்டை' எனப் பெயருற்று, நாளடைவில் மருவி 'வல்லக்கோட்டை' என்றானதாம். கோட்டை ஆண்டவர் என்ற பெயரே மருவி 'கோடையாண்டவர்' ஆகியிருக்கலாம் என்கின்றனர்.
இந்திரன் தனது வஜ்ராயுதத்தை ஊன்றி தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, இவ்விறைவனை வழிபட்டுள்ளான் என ஸ்தல வரலாறு.