லட்சுமி தேவியும் சரஸ்வதி தேவியும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று தர்க்கத்தில் பிரம்மனிடம் நியாயம் கேட்டனர். லட்சுமி தேவியே உயர்ந்தவள் என்று பிரம்மன் தீர்ப்புக் கூறியதால், சரஸ்வதி கோபித்துக் கொண்டு பூலோகத்திலுள்ள சஹ்ய பர்வதம் வந்து விட்டாள்.
பிரம்மதேவன் உத்திரவேதியில் அஸ்வமேத யாகம் ஒன்று செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். யாகம் செய்பவர் தனது துணைவியை யக்ஞ பத்னியாக யாகசாலையில் அமர்த்தி அவளது துணையுடன் யாகம் நடத்த வேண்டும் என்பது நியதி. இதற்கு சரஸ்வதியை அழைத்தார். கோபத்திலிருந்த சரஸ்வதி மறுத்து விட்டாள். ஆகவே மற்றொரு தாரமான சாவித்ரியை வைத்துக் கொண்டு யாகத்தை ஆரம்பித்தார்.
மேலும் கோபமுற்ற சரஸ்வதி தேவி, நதி ரூபத்தில் தோன்றி, வெள்ளப் பெருக்காக மாறி யாகசாலையை நெருங்கினாள். வேகவதி எனும் பெயருடன் காட்டாறாக சீறி வந்த நதியின் அழிவிலிருந்து தம்மையும் தாம் செய்யவிருக்கும் யாகத்தையும் காப்பாற்ற திருமாலிடம் வேண்டினார் பிரம்மதேவன்.
அதே சமயத்தில் அம்பரீஷர் எனும் ராஜரிஷியும் திருமாலின் தரிசனம் வேண்டி அங்கே தவம் செய்து கொண்டிருந்தார்.
யாகத்தை அழிவிலிருந்து காக்கவும், பக்த அம்பரீஷனுக்கு காட்சி தரவும் நினைத்த திருமால், பாலாற்றின் குறுக்கே தெற்கே திருமுடி வைத்து, வடக்கே திருவடி நீட்டி, ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டு ஓடி வரும் நதியின் வெள்ளத்தை அணை போல் சயனித்து தடுத்து விட்டார். யாகம் தடையின்றி நடைபெற்றது. சரஸ்வதியும் கர்வபங்கமடைகிறாள்.
மரிசியின் புதல்வர் காஷ்யபரின் யோசனைப்படி, தான் கொண்ட பிரம்மஹத்தி தோஷத்தை, தேவேந்திரன் இத்தலத்தில் ஓராண்டு காலம் தங்கி, தீர்த்தத்தில் நீராடி, இவ்விறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
வடவரங்கன் ஸ்தலமான இத்தலத்தில் ஓர் இரவு தங்கினால் மோட்சம் என பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. இத்தலத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் சகல சௌபாக்யங்களுடன் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
உத்திர ரங்க க்ஷேத்ரம்.