மேல்மலையனூரிலிருந்து, நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை அழைத்துக்கொண்டு இவ்வூர் வழியே நடந்து வந்தார் ஒருவர். கையில் சூலம் ஒன்றை வைத்து ஊன்றி நடந்துகொண்டிருந்த அந்தப் பெண்மணி, மேற்கொண்டு நடக்க முடியாமல் கஷ்டப்பட்டாள். தண்ணீர் இல்லாமல் தாகம் மேலிட, சோர்வு ஏற்பட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்துவிட்டாள்.
அருகேயுள்ள குசஸ்தலை ஆற்றின் பக்கம் தண்ணீர் எடுத்து வர ஓடினான் கணவன். திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கையில் தண்ணீருடன் மறு பக்கம் செல்ல முடியாமல் தவித்தான். வெள்ளம் வடிந்து, சகஜ நிலையானதும், மனைவியை இருக்கச் சொன்ன மரத்தடி நோக்கி ஓடினான். அங்கு, நிறைமாத கர்ப்பிணியானவள் ஒரு புற்று வடிவம் கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனான். மேல்மலையனூரிலிருந்து, மனித உருவில் அங்காள பரமேஸ்வரியே இங்கு வந்திருப்பதாக இவ்வூர் மக்கள் கொண்டாடுகின்றனர்.
பூக்கள் மிகுந்த சோலையின் நடுவே புற்று வடிவம் கொண்டதால் பூங்காவனத்தம்மன் என்று பெயர் கொண்டாள் - என ஸ்தல வரலாறு.