'எம் தந்தை' என்பதையே 'எந்தை' என்று கூறுவார்கள். தந்தையாகியப் பெருமாள் அகிலவல்லித் தாயாரை இடப் பக்கமாக ஏற்றுள்ளதால் 'திரு இட எந்தை' எனப் பெயருற்று, பின்னர் மருவி 'திருவிடவெந்தை' என்றானது.
(கடல் மல்லையில் வராஹ மூர்த்தி தேவியை வலப் பக்கமாக கொண்டிருப்பதால் 'திரு வல எந்தை' என்பர்.)
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் தோற்றுப் போன அசுரர்கள், பராக்கிரமசாலியான பலி எனும் அசுரனின் உதவியை நாடினார்கள். தேவர்களுடன் போரிட முதலில் மறுத்தாலும், அசுர குலத்திற்கு உதவும் எண்ணத்தில் உதவ முன் வந்தான். பலியின் துணையுடன் மீண்டும் போர் புரிந்த அசுரர்கள் - தேவர்களை தோற்கடித்தனர்.
தேவர்களுடன் போரிட்ட பாவங்களையும், தோஷங்களையும் போக்கிக் கொள்ள எண்ணிய பலி இங்கு நீண்ட தவம் மேற்கொண்டு ஸ்ரீ வராஹரின் அருளைப் பெற்றான் என ஸ்தல வரலாறு. வராஹ ரூபியாக அவனுக்கு சேவை சாதித்த கோலத்திலேயே, தற்போது சேவார்த்திகளுக்கும் சேவை சாதிப்பதாக கூறுவர்.
காலவ மகரிஷிக்கு 364 பெண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் வளர்ந்து மணப் பருவம் அடைந்ததும், பிரம்மசாரி வடிவில் வந்த வராஹப் பெருமாள், ஒரு நாளைக்கு ஒரு கன்னிகை வீதம் மணப்பதாக கூறி, அதன்படியே தினமும் மணந்ததால் நித்ய கல்யாணப் பெருமாள் என்ற திருநாமம் கொண்டார். கடைசி நாளன்று, 364 பெண்களையும் ஒன்று சேர்த்து, ஒரே பெண்ணாக்கி, தனது இடது தொடையில் இருத்திக் கொண்டார் என ஸ்தல வரலாறு.
திருமணம் கைகூட வேண்டும் என பிரார்த்திப்பவர்களுக்கு திருமண வரம் தந்தருளும் ஸ்ரீ ஆதிவராஹர் எழுந்தருளியுள்ள க்ஷேத்ரம். மூலவருக்கும் உற்சவருக்கும் மாலைகள் அணிவித்து, அவற்றில் ஒன்றை பிரசாதமாகப் பெற்று, திருமண வரம் கோரியவர் கழுத்தில் போட்டுக் கொண்டு 9 முறை பிரதட்சிணம் வருகின்றனர். பின்னர் வீட்டிற்கு மாலையை எடுத்துப் போய் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். திருமணம் நடந்தேறியதும், கோவிலுக்கு பழைய மாலையை சேர்ப்பித்து விட்டு, மீண்டும் இரண்டு மாலைகளுடன் தம்பதி சமேதராய் வந்து பெருமாளை வலம் வந்து வழிபட்டு சேவிக்க வேண்டும் என சம்பிரதாயம்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.