இரண்யாட்சகன் எனும் அசுரன், பூமியை பாயாக சுருட்டி எடுத்துக்கொண்டு பாதாளம் சென்று விட்டான். வானவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மஹாவிஷ்ணு வராஹ அவதாரமெடுத்து இரண்யாட்சனை சம்ஹாரம் செய்து, பூமியை மீட்டார். பூமாதேவியின் விருப்பத்திற்கிணங்க இங்கு எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். பாதி நரனாகவும், பாதி வராஹமாகவும் உள்ள தோற்றம்.
வராஹ மூர்த்தியால் வதம் செய்யப்பட்ட இரண்யாட்சகனின் மகள் ஜல்லிகை கடுந்தவம் புரிந்து பூவராகரின் தரிசனம் பெற்றாள். அவளது மகன் தண்டகன் அனைவரையும் இம்சித்ததால் வராஹ மூர்த்தி அவனையும் அழித்து நற்கதி வழங்கினார் என வரலாறு.
தனது அயர்ச்சி தீர இங்கு தங்கினார் வராஹ மூர்த்தி. சம்ஹார தளர்ச்சியினால் ஏற்பட்ட அபரிதமான வியர்வை நீரே இங்கு புஷ்கரிணியாக உள்ளது. அதன் கரையிலுள்ள அஸ்வத்த (அரச) மரம் மிகவும் புனிதத்துவம் கொண்டது. இந்த அரசமரமே உலகில் முதன்முதலாக தோன்றியது என்பர். இந்த அஸ்வத்த மரமும், துளசியும் வராஹரின் கண்களிலிருந்து உருவானவை என்பர்.
இங்கு தரப்படும் முஸ்தாபி சூரணம் நோய் தீர்க்கும் சஞ்சீவினி எனப் போற்றப்படுகிறது. முஸ்லிம்களாலும் வழிபடப்படுகிறது இந்த ஸ்தலம் எனத் தெரிவிக்கின்றனர். கோரைக் கிழங்கு மாவு உருண்டை பிரசாதமாகத் தரப்படுகிறது.
சார்லஸ் ஹைட் என்ற ஆங்கிலேயர், இரண்டு வைர முடிகளையும் தேர் இழுக்கும் சங்கிலியையும், கோவிலுக்கு பரிசாக தந்துள்ளார் என ஆலயக் குறிப்பு ஒன்று கூறுகின்றது.
பூவராக க்ஷேத்ரம் எனப்படும் இத்தலம் எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்ரங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது.