முருகனின் அவதாரம் நிகழ வேண்டிய சமயம் வந்துவிட்டபடியால், தவத்தில் இருந்த சிவபெருமானின் தவத்தைக் கலைக்க, இந்திரனின் தூண்டுதலால், மலரம்பை சிவபெருமான் மீது எய்து விடுகிறான் மன்மதன். வெகுண்ட சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து மன்மதனை எரித்து விடுகிறார்.
மன்மதனை இழந்த ரதி இத்தலத்து பெருமானை வழிபட்டு, தன் கணவனை மீண்டும் உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டுகிறாள். கொள்ளிடத்தை கங்கையாக பாவித்து தினமும் நீராடி வழிபட்டு வந்த ரதிக்கு, இவ்வூர் அருகேயுள்ள அழகிய மணவாளம் எனும் ஊரில் காட்சி தந்து அருள்பாலிக்கிறார் சிவபெருமான். அவள் கண்களுக்கு மட்டுமே மன்மதன் தெரிவான் என்று வரமருளினார். (அழகிய மணவாளத்திலும் சிவாலயம் உள்ளது).
ரதியும் மன்மதனும் பூஜித்த ஸ்தலம் என்பதால் காமாதிவல்லி எனப் பெயர் கொண்டு பின்னர் மருவி காமரசவல்லி என்றானது.
நோய்வாய்ப்பட்ட கார்க்கோடகன் இத்தலத்தில் வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான். கார்க்கோடகன் வழிபட்டதால் இறைவனுக்கு கார்க்கோடேஸ்வரர் என்ற பெயர் உண்டானது. இதனால் இந்த ஸ்தலம் நாக தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது.
பரீட்சித்து மகாராஜா சாப விமோசனம் பெற்ற ஸ்தலம். அப்பர் பெருமானின் சாக்கையர் கூத்தில் இடம் பெற்ற ஸ்தலம்.
தேவார வைப்புத்தலம்.