மூலவர்: சௌந்தரராஜப் பெருமாள், தாயார்: சௌந்தரவல்லி.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஐந்தடி உயரம் கொண்ட அழகிய திருமேனியுடன், சர்வாலங்காரத்துடன் காணப்படுகிறார். சங்கு, சக்கரம், கதை ஏந்தியுள்ளார்.
உற்சவ மூர்த்தி கவசம் அணிந்து, சங்கு, சக்கரம், கதை ஏந்தி காணப்படுகிறார். சௌந்தரவல்லித் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
ஸ்ரீ வாசுதேவ தன்வந்த்ரி தனி சந்நிதியில் எழுந்தருளி அருள் புரிகின்றார். சங்கு, சக்கரம், அமிர்த கலசம், ஜலூகம் (அட்டைப்பூச்சி) ஆகியன கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி.
நோய்வாய்ப்பட்டவர்கள் இவருக்கு நேர்த்திக்கடனாக தைலக்காப்பு திருமஞ்சனம் செய்கின்றனர். சுக்கு, மிளகு, திப்பிலி, பசு நெய், கருப்பட்டி, தேன் ஆகியவற்றால் செய்த லேகியத்தை உட்கொண்டு, தைலத்தை உடலில் பூசிக் கொள்கின்றனர். அமாவாசையன்று செய்ய கூடுதல் விசேஷம் என்பர்.
இங்குள்ள ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு பசும்பால் மற்றும் மஞ்சள் பொடி அபிஷேகம் செய்து சிகப்பு அரளி சாத்தி வழிபடுகின்றனர். பிரிந்த உறவுகள் ஒன்று சேரவும், தொலைந்து போன பொருட்கள் திரும்ப கிடைக்கவும் இங்குள்ள கார்த்தவீர்யாஜுணனுக்கு எலுமிச்சை மாலை சாத்தி வழிபடுகின்றனர்.
மண்டபத் தூண்களின் சிற்பங்கள் அனைத்தும் வேறு எங்கும் காண முடியாது என்பர். சிறந்த அலங்கார வேலைப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டு. ஆறடி உயர பிள்ளையார், விஷ்ணு துர்க்கை, ஊர்த்துவ தாண்டவர், ரதி - மன்மதன், தில்லைக்காளி ஆகிய சிற்பங்கள் பேரெழில் கொண்டுள்ளன.
இந்நாளிலும் சிற்பிகள் - தாடிக்கொம்பு, தாரமங்கலம், ஆவுடையார் கோவில், திருவீழிமிழலை, திருவலஞ்சுழி ஆகிய ஸ்தலங்கள் நீங்கலாக - சிற்ப வேலைகள் செய்து தருவோம் என்று எழுதித் தருவதே இதற்கு சான்று எனக் கூறுகின்றனர்.
பிரகார வலச்சுற்றில் லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர், சீதா தேவி, லக்ஷ்மண சகித ஸ்ரீராமர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், லட்சுமி ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர்.