பழையாறையின் நான்கு திசைகளிலும் சிவாலயங்களை ஸ்தாபித்த சோழ மன்னர்கள் அவற்றிற்கு கீழத்தளி, மேற்றளி, வடதளி, தென்தளி எனப் பெயரிட்டனர். இப்போது கீழத்தளி மட்டுமே உள்ளது. கீழத்தளிக் கோவிலை மூன்றாம் குலோத்துங்கன் கற்றளியாக அமைத்தான். குந்தவை பிராட்டியார் இங்கு தங்கிதான் ராஜேந்திர சோழனை வளர்த்தார் என்பார்கள்.
சந்திரன் ஸ்வாமியையும் அம்பாளையும் வழிபட்டு நற்பலன்கள் பெற்றான். அவனுக்கு அருள் புரிந்ததால் ஸ்வாமிக்கு ஸ்ரீ சோமநாதர் என்றும், அம்பாளுக்கு ஸ்ரீ சோமகலாம்பிகை என்ற பெயரும் வந்தன.
காமதேனுவின் நான்கு புதல்விகளுள் ஒருத்தியான கமலி என்பவள் இங்குள்ள அம்பிகையை விரதமிருந்து பூஜித்ததால் சோமகமலாம்பிகை என்ற பெயரும் உண்டு. (காமதேனுவின் நான்கு புதல்விகள்: பட்டி, விமலி, கமலி, நந்தினி.)
அமர்நீதி நாயனார் அவதரித்த ஸ்தலம். வாணிபத்தை சிறப்புற செய்து செல்வந்தராக திகழ்ந்த அவர் இவ்வூருக்கு வரும் அடியார்களுக்கு உணவு, வஸ்திரம் போன்றவற்றை அளித்து தொண்டாற்றி வந்தார்.
ஒரு சமயம் இவரை சோதிக்கும் நோக்கத்தில் பிரம்மச்சாரியாக இவரிடம் வந்த சிவபெருமான், தான் குளித்துவிட்டு வரும்வரை தனது கோவணம், தண்டம், திருநீற்றுப்பை ஆகியவற்றை பாதுகாக்குமாறு கூறிவிட்டு சென்றார்.
கோவணம் காணாமல் போயிற்று. "விலை உயர்ந்த பொருளை தொலைத்துவிட்டாயே" எனக் கூறி ஆர்ப்பாட்டம் செய்தார் பிரம்மச்சாரி. அதற்கு சமமாக தனது செல்வங்களனைத்தையும் துலாபாரத்தில் வைத்தும், தனது மனைவி குழந்தைகளுடன் துலாபாரத் தட்டில் ஏற முற்பட்டபோது ரிஷபாரூடராய் காட்சி தந்தார் இறைவன் என ஸ்தல வரலாறு.
சமணர்களால் மறைக்கப்பட்ட இறைவனை அப்பர் ஸ்வாமிகள் உண்ணாவிரதமிருந்து வெளிக் கொணர்ந்தார் எனக் கூறப்படுகிறது.