மதுரையிலிருந்து க்ஷேத்ராடனம் செய்யப் புறப்பட்ட சுந்தர பாண்டியன் இவ்வூருக்கு வந்து இறைவனை தரிசிக்க இருப்பதாகத் தகவல் வரவே, இவ்வாலயத்து அர்ச்சகர் வெகு நேரம் காத்திருந்தார். குறிப்பிட்ட நேரம் கடந்தும் அரசன் வராததால், எதிர்பார்த்துக் காத்திருந்த அர்ச்சகர் நடையை மூடிவிட்டு இல்லம் விரைந்தார். சுவாமி மீதிருந்த மாலைகளைக் கழற்றி எடுத்துச் சென்றார். வீட்டில் தான் நேசிக்கும் கணிகை இருந்தது கண்டு அவளுக்கு மாலையை அணிவித்து அழகு பார்த்தார்.
அப்போது அரசன் ஆலயத்துள் வந்து கொண்டிருக்கும் செய்தி அர்ச்சகருக்குத் தெரிவிக்கப்பட்டது. சுவாமி மீது மாலைகள் இல்லாதிருந்தால் அரசன் கோபிக்க நேரிடும் என எண்ணிய அர்ச்சகர் கணிகைக்கு அணிவித்த மாலையைக் கழற்றி எடுத்து, கோவிலுக்குத் திரும்ப எடுத்துச் சென்றார். அரசனுக்குத் தரிசனம் செய்வித்து, பின்னர் அவருக்கு மாலையைக் கழுத்தில் அணிவித்தார்.
மாலையில் முடி ஒன்று இருந்தது கண்ட அரசன் திகைப்படைந்து, முடி வந்த காரணத்தை வினவினான். சுவாமிக்குக் குடுமி இருக்கிறதே.. அவர் சிகாநாதர் அல்லவா? என்று சமாளித்தார் அர்ச்சகர்.
பதிலில் திருப்தி அடையாத அரசன் கோபம் கொண்டு, நாளைக் காலை சுவாமியின் குடுமியைப் பார்க்க வருவோம்..அதுவரை அர்ச்சகர் சிறையில் இருக்கட்டும் என உத்தரவிட்டான். தான் செய்த தவற்றிற்காக மனம் வருந்திய அர்ச்சகர் இறைவனிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டி நின்றார். மறுநாள் அரசனுக்குத் தலையில் குடுமியுடன் காட்சி தந்தார் இறைவன். குடுமியைச் சோதிக்க அரசன் இழுத்துப் பார்த்தான். திருமுடியிலிருந்து ரத்தம் கசிந்தது. தன்னுடைய செயலுக்காக சுவாமியிடம் மன்னிப்பு கேட்ட அரசன், அர்ச்சகரை விடுவித்தான். இதனால் சுவாமிக்குக் குடுமிநாதர் எனப் பெயர் வந்ததாக ஸ்தல வரலாறு.