இவ்வூர் வரதராஜப் பெருமாள் கோவிலிலுள்ள ராமர் விக்ரஹங்களை கடத்த முற்பட்ட திருடர்கள், சிலைகளை,
வாய்க்கால் நீரில் வாழைமர தெப்பத்தில் ஏற்றி பிரதான சாலை வரை கொண்டு சென்று அங்கிருந்து வாகனத்தில்
ஏற்றி கடத்தலாம் என திட்டமிட்டு, சிலைகளுடன் குடமுருட்டி வாய்க்கால் கரையை அடைந்தனர்.
நள்ளிரவு வேளையில் வாய்க்கால் வழியே சிலைகளை கடத்த முயற்சிக்கும் திருடர்கள், வானவெளியில் கேட்ட
சிலம்பொலிக்காக நிமிர்ந்து பார்த்தனர். அருகே ஊர்க்காவலில் இருந்த சந்தன மாரியம்மனின் சூலம் பிரகாசமாக
அவர்களை நோக்கி வந்தது. திருடர்களின் கண் பார்வை பறி போனது. கண்ணை இழந்த இடத்தில் இருக்கும்
வாய்க்காலுக்கு பொட்டை வாய்க்கால் என்ற பெயர் இன்றளவும் உள்ளது.
திருடிய சிலைகளை மீண்டும் கோவிலில் வைத்து விடுகிறோம், செய்த குற்றத்தை மன்னித்து மீண்டும் கண்
பார்வையை கொடுத்துவிடு தாயே என மன்றாடி அழுதனர். அன்னையின் கருணையால் பார்வை கிடைத்தது.
தாமாகவே போய் கிராம நாட்டாண்மையிடம் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
செல்வந்தர் ஒருவரிடம் கடன் வாங்கிய ஏழை விவசாயி, வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பிக் கொடுத்து
விட்டார். செல்வந்தர் பத்திரத்தை திருப்பி தரவில்லை. எழுதப் படிக்க தெரியாத விவசாயி என்பதால் அவரை
எளிதில் ஏமாற்றிவிட முனைந்த செல்வந்தர் கடனை திருப்பித் தரவில்லை என வழக்கு தொடுத்து விட்டார்.
வழக்கை விசாரிக்க வந்த ஆங்கிலேய நீதிபதி, கடனை திருப்பிக் கொடுத்ததிற்கு சாட்சி ஏதேனும் உண்டா?
என விவசாயியைப் பார்த்துக் கேட்டார். சந்தன மாரிதான் சாட்சி எனக் கூறினார் விவசாயி.
அன்றிரவு நீதிபதியின் கனவில், பட்டுப் பாவாடைக் கட்டிக் கொண்டு தோன்றிய சிறுமி ஒருத்தி, நான்தான்
சந்தன மாரி, விவசாயிக்கு சாட்சி சொல்ல வந்துள்ளேன் என்றாள். நான் எதை ஆதாரமாகக் கொள்வது
என வினவிய நீதிபதியிடம், சிலரின் பெயர்களைக் கூறி, அவர்களை அழைத்து விசாரிக்க வேண்டிய
ஆதாரங்கள் கிடைக்கும் என்று கூறி மறைந்து போனாள்.
சிறுமி கனவில் குறிப்பிட்ட நபர்களை, கிராம அதிகாரியின் துணையுடன் அழைத்து வந்து விசாரித்ததில்
விவசாயி கடனை திருப்பி தந்ததை பார்த்ததாக கூறி விட்டார்கள். சந்தனமாரி கூறிய சாட்சியத்தின்படி
தீர்ப்பளிக்கின்றேன் என ஆங்கிலேய நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
பிறிதொரு சமயம், மாரியம்மன் கோவிலின் கலசத்தை திருட முயன்று விமானத்தின் மீது ஏறிய குடிகாரன்
ஒருவன், கோபுரத்தின் மீதிருந்த பாம்பு ஒன்று துரத்தியதால், அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி
ஓடினான். பாம்பும் துரத்தியது. இந்த நிகழ்வை யாரும் பார்க்கவில்லை என்றாலும், பாம்பின் பயத்தால்
அவன் தானாகவே நாட்டாண்மையிடம் போய் விபரத்தைக் கூறி மன்னிப்புக் கேட்டு அபராதம் கட்டினான்
எனக் கூறப்படுகிறது.
இவ்வளவு அதிசயங்களை நடத்திய சந்தன மாரியம்மன் கோவில் கொண்ட ஸ்தலம்.