பாற்கடலிலிருந்து அமிர்தம் எடுக்க கடைந்தபோது தோன்றிய சங்கநிதி, பதுமநிதி ஆகிய ஐஸ்வர்யங்களுக்கு அதிபதியாக குபேரனை நியமித்தார் நாராயணன். குபேரனும் தர்ம நிலை தவறாது பாதுகாத்து வந்தான். ஒரு நாள் சபலம் கொண்டு ஒரு பாதகத்தைச் செய்துவிட்டதால், அஷ்ட ஐஸ்வர்யங்களும், நவநிதிகளும் குபேரனை விட்டு நீங்கிவிட்டன. தான் செய்த தவறை எண்ணி வருத்தமுற்ற குபேரன், இழந்த செல்வங்களை மீண்டும் பெற வழி சொல்லும்படி சப்தரிஷிகளிடம் கேட்டான்.
சப்தரிஷிகள், திருத்தண்டிகைபுரம் சென்று சோம தீர்த்தத்தில் நீராடி சனத்குமாரேஸ்வரரையும் சௌந்தர்யநாயகியையும் வழிபடும்படி கூறினார்கள். அவர்களின் அறிவுரைப்படி இத்தலம் வந்து இவ்விறைவனையும் அம்பிகையையும் வழிபட்டு, இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றான். தன்னைப் போல கஷ்டப்படும் பக்தர்களை ரட்சிக்க, இத்தலத்திலேயே கோவில் கொள்ளும்படி வேண்டினான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.