இந்த துர்க்கை மஹாவிஷ்ணுவின் யோக மாயையாக போற்றப்படுபவள். விஷ்ணுவின் சங்கல்பத்தினபடி இந்த யோக மாயை, ஆயர்பாடியில் யசோதை வயிற்றில் பெண்ணாக பிறந்தவள். பகவான் கிருஷ்ணனாக அவதரிக்கும் முன் யோக மாயையான அம்பிகையை, விஷ்ணு கூறியபடி, (தேவகியின் வயிற்றிலுள்ள கருவை ஆயர்பாடியிலுள்ள ரோகிணியின் கருப்பையில் சேர்க்கும்படி) யசோதையின் வயிற்றில் அவதாரம் செய்யும்படி பணித்தார். பிறகு குழந்தைகள் மாறி கம்சனால் பாறையில் எறியப்பட்ட மாயை, வானில் தோன்றி, பகவான் ஆயர்பாடியில் தோன்றியுள்ளதை, கம்சனுக்கு கூறிவிட்டு மறைந்தாள். இந்த யோக மாயையே, கிராமங்கள்தோறும் கோவில் கொண்டவள்.
இந்தக் கோவில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சுற்றுக் கோவில்களுள் ஒன்று.
விஜயநகர மன்னர்கள் தென்னாட்டு படையெடுப்பின்போது கண்ணனூரில் முகாமிட்டிருந்தார்களாம். அப்போது அங்குள்ள அரண்மனை மேட்டு மாரியம்மனை வழிபட்டு வந்தார்களாம். போரில் வெற்றி பெற்றதனால் பிரார்த்தித்துக் கொண்டபடி மாரியம்மன் கோவிலை கட்டினார்கள் எனக் குறிப்பொன்று கூறுகிறது.
சித்திரை முதல் செவ்வாயன்று தேர் திருவிழா. வைகாசியில் 14 நாட்கள் பஞ்ச பிரகார திருவிழா. வைகாசி முதல் நாளன்று பகல் 1.00 மணிக்கு - பால், பஞ்சாமிர்தம், விபூதி, பழ வகைகள், திரவியங்கள் கொண்டு விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும்.
தைப்பூச தினத்தன்று காலை அன்னை கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு மாலை ஸ்ரீரங்கம் வடகாவேரியை அடைவாள். மாலை தீர்த்தவாரி நடைபெறும். அன்று அரங்கனிடமிருந்து தைமாச சீர்வரிசையாக பட்டுப் பாவாடைகள், மாலைகள் ஆகியன வந்து சேரும். தைப்பூச உற்சவம் 13 நாட்கள் நடைபெறும். 2ஆம் நாளிலிருந்து 8ஆம் நாள் வரை வாகனங்களில் வீதிவுலா நடைபெறும். 9ஆம் நாள் தெப்ப உற்சவம்.
மாசி மாச கடைசி ஞாயிறு தொடங்கி 28 நாட்களுக்கு அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருப்பாள். தளிகை நைவேத்தியம் கிடையாது. இளநீர், நீர் மோர், பானகம், வெள்ளரிப் பிஞ்சு, துள்ளு மாவு (அரிசி மாவும் நாட்டு சர்க்கரையும்) மட்டுமே நைவேத்தியம் செய்வார்கள். அப்போது பூச்சொரிதல் விழா நடைபெறும்.
நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லாதவர்கள் விசேஷ பிரார்த்தனையாக கரும்புத் தூளி எடுப்பதாக வேண்டிக் கொள்வார்கள். அன்னையின் அருளால் குழந்தை பிறந்ததும் (6 மாதம்) சீமந்த வேஷ்டி/புடவை துணிகளை மஞ்சளில் நனைத்த தூளியாக்கி, அதில் குழந்தையைக் கிடத்தி, கரும்பில் தொங்கவிட்டு, பெற்றோர்கள் தூக்கிக் கொண்டு கோவிலை மூன்று முறை வலம் வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர். உரிய வசதிகளுடன் கூடிய மாவிளக்கு மண்டபம் ஒன்றை பக்தர்களின் வசதிக்காக அமைத்துள்ளனர்.
சக்தி பீடம்