ஸ்ரீ ராமபிரான் ராவண வதம் முடித்து அயோத்தி திரும்புகையில், தனது தந்தையார் வழிபட்ட ஸ்தலமான இத்தலத்திற்கு வந்து, மண்ணால் லிங்கம் ஒன்றை உருவாக்கி பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.
கால சக்கர நியதிப்படி சனீஸ்வரன், கிருத்திகையிலிருந்து ரோஹிணி நட்சத்திரத்தில் சகடத்தை உடைத்து சஞ்சாரம் செய்ய இருப்பதாக ஜோதிடர்கள் மூலமாக தெரிந்து கொண்டார் தசரத சக்ரவர்த்தி. அவ்வாறு நடந்தால் நாட்டில் பஞ்சம் உண்டாகுமே எனக் கவலையுற்றார். அதை தடுக்க, சனீஸ்வரருடன் போர் தொடுக்கலானார்.
சம்ஹார அஸ்திரம் ஏவத் தயாராக நின்ற தசரதனின் துணிவைப் பாராட்டிய சனீஸ்வர பகவான், தசரதன் வேண்டியபடி, அவனது நாட்டில் பஞ்சம் வாராதிருக்க ரோஹிணியை பிளந்து கொண்டு போவதில்லை என உறுதி அளித்தார்.
இதனால் மகிழ்வுற்ற தசரதன் சனீஸ்வரரை துதித்து ஸ்லோகம் பாடி வழிபட்டார் என தல வரலாறு கூறுகிறது.