குழந்தைகள் இல்லாமல் வருந்திய தசரத சக்ரவர்த்தி, வசிஷ்டரின் யோசனைப்படி, வடக்கிலிருந்து கிழக்காக கமண்டல நதி திரும்பும் இடத்தில், சிவாலயம் ஒன்றை ஸ்தாபித்து, விரதம் அனுஷ்டித்து, புத்திர காமேஷ்டி யாகம் செய்து, இறைவன் அருள் வேண்டி நின்றார்.
அதன் பலனாக ஸ்ரீ ராமர், லக்ஷ்மணர், பரதன், சத்ருக்கணன் எனும் நான்கு பிள்ளைகள் பிறந்தனர் என ஸ்தல வரலாறு.
தசரதர் தவம் மேற்கொண்ட இடத்தில், கோபுரத்தின் எதிரில், தசரதருக்கு சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஜமதக்னி முனிவரின் கமண்டலம் கவிழ்ந்து அதிலுள்ள நீர் ஓடியதாலும், பாம்பு போல் வளைந்து செல்வதாலும், கமண்டல நாக நதி எனும் பெயருடன் கிழக்கு - வடக்காக திரும்புமிடத்தில் ஆலயம் உள்ளது. இந்த நதி படவேட்டில் உற்பத்தியாகி செய்யாறு - காஞ்சிபுரம் வழியே ஓடி கடலில் கலக்கிறது.
புத்ர பாக்யம் வேண்டுபவர்கள், இந்த நதியில் நீராடி - படித்துறை விநாயகரையும், வீர ஆஞ்சநேயரையும் வழிபட்டு, வேம்புடன் இணைந்த அரச மரத்தடியின் நாகப்ரதிஷ்டைகளை வணங்கி பின்னர் கோவிலுக்குள் சென்று தரிசிக்கலாம்.
ஸ்தல விருட்சமான வில்வ மரத்தின் இலைகளைக் கொண்டு, மூலவரை அர்ச்சித்து பவளமல்லி மரத்தில் கல் ஒன்றை கட்டி, பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
ஐந்து வாரங்கள் தொடர்ந்து விரதமிருந்து ஈசனை பூஜிக்க வேண்டும். முதல் வாரம் ஒரு குழந்தை, 2ம் வாரம் இரண்டு குழந்தைகள், 3ம் வாரம் மூன்று குழந்தைகள், 4ம் வாரம் நான்கு குழந்தைகள், 5ம் வாரம் ஐந்து குழந்தைகள் என போஜனம் செய்விக்க வேண்டும். ஆறாவது திங்கள், ஆரணி வந்து, தம்பதி சமேதரராய் வழிபடவேண்டும். பிரார்த்தனை பலித்ததும் இவ்விறைவனுக்கு பொங்கல் நைவேத்தியம் செய்ய வேண்டும். (வீட்டிலேயே கூட விரதமிருக்கலாம்)