அகஸ்தியரின் குடத்திலிருந்து பெருக்கெடுத்தோடிய காவிரி நீர் பல இடங்களில் கடல் போல் தேங்கி நின்றது. தேவேந்திரன் ஐயாறப்பரை வழிபட்டு கிழக்கு நோக்கி ஓடும்படிச் செய்தான். அப்போது ஆற்று மணல் வண்டலாகப் படிந்து துருத்தியாக நின்றது. ஆற்றிடையே உண்டாகும் நிலப்பகுதிக்கு துருத்தி எனப் பெயர்.
சோழ அரசன் ஒருவனுக்காக சிவலிங்கம் வடிக்க ஆரம்பித்த சிற்பிகள், குறிப்பிட்ட காலத்திற்குள் செய்ய இயலாமல் போனதால், உலை ஊதும் துருத்தியில் மணலை நிரப்பி லிங்கம் போல் செய்து பிரதிஷ்டை செய்து விட்டனர். அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும் அரசன் திரும்பிச் சென்றான். பின்னர் லிங்கத்தை எடுக்க முயன்றனர், ஆனால் முடியவில்லை. துருத்தியே லிங்கமாக மாறியதாலும் இப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
மலர்வனத்தின் நடுவே தோன்றியதாலும், தேவர்கள் மலர்களால் அர்ச்சித்ததாலும் புஷ்பவனேச்வரர் எனும் திருநாமம் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இவ்வாலயத்தின் வடகிழக்கே மடம் ஒன்றை ஸ்தாபித்து அதில் தங்கிக்கொண்டு இவ்வாலயத்திற்கு உழவாரப் பணிகளை செய்து கொண்டிருந்தார் அப்பர் சுவாமிகள். பெரியவர் உழவாரப் பணிகள் செய்த இடத்தில் தனது கால் படலாகாது என எண்ணிய ஞானசம்பந்தர், ஆலயத்து வெளியே நின்று கொண்டு தரிசனம் செய்தார். அவரது தரிசனத்திற்கு இடையூறு செய்யலாகாது என நந்தி வழி விட்டு விலகி நின்றது என ஸ்தல வரலாறு.
அப்பரைக் காண இவ்வூருக்கு முத்துப்பல்லக்கில் வந்தார் ஞானசம்பந்தர். அவர் வந்த பல்லக்கை அவருக்குத் தெரியாமலேயே அப்பர் சுமந்து வந்த நிகழ்வு நடந்த தலம். அப்பர் பெருமானுடனேயே சில காலம் மடத்தில் தங்கிவிட்டுச் சென்றார் ஞானசம்பந்தர்.
சிவதீட்சை காலத்தில் சிறப்பு பெறும் அங்கமாலை மற்றும் பல திருத்தாண்டகங்களை அப்பர் சுவாமிகள் பாடிய தலம். தேவேந்திரனும் காஸ்யப முனிவரும் பூஜித்த தலம். தட்சன் நடத்திய வேள்வியில் கலந்து கொண்டு சிவ அபராதம் கொண்ட சூரியன் பூஜித்து, சிவ அபராதம் நீங்கப் பெற்ற தலம்.
13 புனித கங்கையில் நீராட ஆசைப்பட்ட காச்யப முனிவர், இத்தலத்தில் தவமிருந்து பிரத்யட்சமான இறைவனிடம் வரம் பெற்று, ஒரு ஆடி அமாவாசையன்று கிணற்றுக்குள் அவற்றை வரவழைத்து, அந்த புனித நீரால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து ஆசையை பூர்த்தி செய்து கொண்டார். கோவிலின் அக்னி மூலையில் ஆதி விநாயகர் சந்நிதி அருகே அந்த கிணறு உள்ளது.
ஆடி அமாவாசை, மஹாளாய அமாவாசை தினங்களில் இவ்விறைவனையும், முன்னோர்களையும் வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும் என ஐதீகம். ஆடி அமாவாசையன்று இறைவன் காட்சி தந்ததால் அந்த தினத்தில் விசேஷ ஆராதனைகள் நிறைந்திருக்கும்.
சப்த ஸ்தான தலங்களுள் ஆறாவது தலம்.
கிருஷ்ணலீலா தரங்கிணி பாடிய நாராயண தீர்த்தர் ஜீவசமாதி அடைந்த தலம் (1745). மாசி சுக்ல அஷ்டமி தினத்தன்று தொடங்கி இசைக் கச்சேரிகள், நாம சங்கீர்த்தனங்கள், அன்னதானம் ஆகிய வைபவங்கள் சிறப்புற நடக்கின்றன.
தேவாரத் திருத்தலம் - சப்த ஸ்தான தலங்களுள் ஒன்று.