சிவபக்தனான அலைவாணர், முதலாம் குலோத்துங்க சோழனிடம் மந்திரியாக இருந்தவர். வசூலித்த வரிப் பணத்தை எல்லாம் இவ்வாலயத்தைச் சீர் செய்ய செலவிட்டார். வரிப்பணம் கருவூலத்தில் சேராததால் கோபம் கொண்ட மன்னன், மந்திரியை சிரச்சேதம் செய்ய கட்டளையிட்டான்.
தண்டனை நிறைவேற்றப்பட்டதும், தனது உடலை இவ்வாலயமருகே அடக்கம் செய்ய வேண்டுமென மந்திரி வேண்டுகோள் விடுத்தார். இறந்தவரது உடலை பணியாட்கள் பல்லக்கில் தூக்கி வரும்போது, மந்திரியின் மனைவி மங்கள நாயகியிடம் மாங்கல்ய பிச்சை கேட்டு அழுகிறாள். அம்பிகையின் அருளால் மந்திரி உயிர் பெற்று எழுகிறார்.
பிராணனை தந்ததால் இவ்விறைவன் பிராணநாதேஸ்வரர் என்றும், மாங்கல்ய பிச்சை தந்த அன்னை மங்கள நாயகி என்றும் அழைக்கப்படலாயின.
முக்காலமும் உணர்ந்த காலவ ரிஷி தனது எதிர்காலத்தை ஆராய்ந்ததில், முன் ஜென்ம பாவங்கள் காரணமாக தொழுநோய் வரவிருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டார். இதிலிருந்து விடுபட பஞ்சாக்னி வளர்த்து, நவகிரகங்களை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார். இதனால் ப்ரீதி அடைந்த நவகிரகங்கள் அவருக்கு தரிசனம் தந்து வேண்டுவனவற்றை கேட்டனர். தனக்கு வரவிருக்கும் தொழுநோய் வராமலிருக்க வரம் கேட்டார் மகரிஷி. நவகிரகங்களும் அவ்வாறே வரம் தந்தனர்.
கிரகங்களுக்கு வரம் தரும் சக்தி இல்லை. தங்களது அதிகார வரம்பை மீறி வரம் தந்ததால், கோபம் கொண்ட பிரம்மன் காலவ ரிஷிக்கு வரவிருந்த தொழுநோய் நவகிரகங்களைப் பற்றிக் கொள்ளட்டும் என சாபமிட்டார். செய்த தவறை மன்னிக்க வேண்டியும் சாப விமோசனம் அளிக்க வேண்டியும், நவகிரகங்களிடம் பூலோகம் சென்று அர்க்கவனம் (வெள்ளெருக்கு காட்டில்) எனப்படும் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு சாபத்தைப் போக்கிக் கொள்ளுங்கள் எனக் கூறி விட்டார்.
தொழுநோய் பற்றிக் கொண்ட நவகிரகங்கள் இத்தலம் வந்து தினமும் காவிரியில் நீராடி மங்கள நாயகியையும் பிராணநாதேஸ்வரரையும் பூஜித்து வழிபட்டனர். வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் வைத்து நைவேத்யம் செய்துவிட்டு, அதையே உணவாகவும் மருந்தாகவும் உட்கொண்டனர். கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி 12 வாரங்கள் (78 நாட்கள்) இவ்வாறு வழிபட்டு, கடுந்தவமிருந்தனர்.
(எருக்கிலையில் தயிரன்னம் வைத்தால் எருக்கின் சாரம் ஒரு அணுப்பிரமாண அளவு தயிரன்னத்தில் கலக்கும். அதுவே தொழுநோய்க்கு மருந்தாகி குணப்படுத்தும் என்ற ரகசியத்தை அகஸ்தியரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர்).
இத்தலத்து ஸ்வாமி - அம்பாளின் அருளால் தொழுநோய் நீங்கப் பெற்று, அருகேயுள்ள சூரியனார் கோவிலில் அனுக்ரஹ மூர்த்திகளாக அமர்ந்தனர் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை உச்சிகால பூஜையில் நைவேத்யம் செய்த தயிர் சாதத்தை வெள்ளெருக்கு இலையில் வைத்து பிரசாதமாக தருகின்றனர். மங்கள நாயகி கரத்தில் தொங்கும் தாலிக்கயிற்றை பெண்களுக்கு தருகின்றனர்.
தேவாரத்திருத்தலம் - பாஸ்கர க்ஷேத்ரம் - பஞ்ச மங்கள க்ஷேத்ரம்.