மகா மண்டபத்தை ஒட்டியுள்ள மூலஸ்தானத்தில் ஸ்ரீ பிரக்ஞா தட்சிணாமூர்த்தி மூலவராகக் காட்சி தருகின்றார். ஒன்பதடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. வலது கரம் சின் முத்திரை கொண்டும், இடது கரத்தில் வேத சுவடிகள் கொண்டும் தரிசனம் தருகின்றார்.
இயற்கையாகவே அமைந்த கற்பாறை - கற்பாறையின் இடையே கல்லால மரம் - அதன் முன்பாக தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் எனப் பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. தெற்கு பார்த்த சந்நிதி.
தேவகுருவாகிய ப்ரஹஸ்பதி எனப்படும் குரு பகவான், ஆதி குருவாகிய தட்சிணாமூர்த்தியைப் பார்த்தபடி, இரு கரம் கூப்பி வணங்கிய நிலையில் (அஞ்சலி முத்திரை), நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மேற்கரங்களில் ஜபமாலையும் கமண்டலமும் கொண்டுள்ளார்.
108 அடி நீளமும் 54 அடி அகலமும் கொண்ட மகா மண்டபத்தில் பல பேர் அமர்ந்து மூலவரையும், விமானத்தையும் ஒரு சேர தரிசிக்கலாம். பஞ்சாட்சர மந்திரத்தைக் குறிக்கும் வகையில் ஐந்து கலசங்கள் காணப்படுகின்றன.
மகா மண்டபத்துக் கதவில் தட்சிணாமூர்த்தியின் 48 வித்தியாசமான திருவுருவங்களை அழகுறச் செதுக்கி, வீணை வாசிக்கும் தட்சிணாமூர்த்தி, மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி எனப் பல அழகிய வடிவங்களை கோஷ்டத்தில் தரிசிக்கலாம்.