காமதேனு பசு இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டது. காமதேனுவின் மகளான பட்டி எனும் கன்றுக்குட்டி துள்ளி குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. லிங்கமூர்த்தியை மூடியிருந்த புற்று ஒன்றில் அதன் கால் சிக்கி மாட்டிக் கொண்டது. பின்னர் கொம்பால் புற்றைக் கிளறியதில், லிங்கத் திருமேனியில் அதன் குளம்பு அழுந்திய தடங்களில் இருந்து குருதி வெளிப்பட்டது.
நடந்தவைகளை தாய் காமதேனுவிடம் கூறியது பட்டி. சிவ நிந்தனை செய்து விட்ட கன்றுக்குட்டிக்காக மனம் வருந்தியது காமதேனு. பிரத்யட்சமான இறைவன், 'உனது கன்றின் செயலை குற்றமாக எடுத்துக் கொள்ளாதே. குளம்பு சுவட்டையும், கொம்பு சுவட்டையும் எமது திருமேனியில் ஏற்று அருளினோம்' எனக் கூறினார்.
'காமதேனுவாகிய நீ வழிபட்டதால் இவ்வூர் காமதேனுபுரி - பட்டிபுரி என அழைக்கப்படும்' என்றும் கூறியதாக ஸ்தல வரலாறு. இதனால் இவ்விறைவனுக்கு பட்டிநாதர் என்ற பெயர் வந்தது.
வெள்ளிமலை இறைவனின் சிரசாகவும், பேரூர் திருவடிகளாகவும் இறைவனின் எண்ணத்தில் சிருஷ்டிக்கப் பெற்றதாக ஐதீகம். ஆதி அரச மரத்தின் கீழ் சித்த மூர்த்திகளாக வந்த சிவபெருமான் சபையை உண்டாக்கி, அதில் கூத்தபிரான் திருவுருவத்தை உண்டாக்கினார் என்றும், இதனடியில் பிரம்மா, விஷ்ணு, காலவர், துர்க்கை ஆகியோர்க்கு திருநடனம் பரிந்து காட்சி தந்ததாக புராணக் குறிப்பொன்று கூறுகிறது.
கோமுனி - பட்டிமுனி தவம் செய்து பங்குனி உத்திர திருநாளில் முக்தி பெற்றதாக ஸ்தல வரலாறு. பரசுராமர் குருவாயூர் போகும் வழியில் இத்தலம் வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது. காமதேனு பசு, பஞ்ச பாண்டவர்கள், வியாக்ரபாதர், பதஞ்சலி, காலவரிஷி மற்றும் எண்ணற்ற முனிவர்கள் முக்தி பெற்ற ஸ்தலம். மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் எனும் மூன்று வகை சிறப்புகளை உடைய ஸ்தலம்.
திப்பு சுல்தான் காலத்தில் ஏற்படுத்திய தீவட்டி சலாம் எனப்படும் வழிபாடு இன்றளவும் தொடர்கிறது.
மாசி மகம், பங்குனி உத்திரம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.