கோச்செங்கட் சோழன் கட்டிய 78 மாடக்கோவில்களுள் ஒன்று. காமதேனு மடி சுரந்த பாலினால் லிங்கத்தை அபிஷேகம் செய்வது போன்ற புடைப்புச் சிற்பம் ஒன்று ஸ்தல வரலாற்றைக் குறிப்பிடுகிறது. பராந்தக சோழன் (907-953) புனர்நிர்மாணம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சோழர்களின் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக பல அரிய வேலைப்பாடுகளை உடைய சிற்பங்களைக் காணலாம். சிவ புராணம், ஹிரண்யவதம் தொடர்புடைய சிற்பங்களும், கிருஷ்ணர் பால் குடிக்கும் சிற்பமும் அற்புதமானவை.
சப்த மாதர்களுள் சாமுண்டி பூஜித்து வழிபட்ட ஸ்தலம். பார்வதி தேவி சக்ரவாகப் பறவையாக வந்து இவ்விறைவனை வழிபட்டதால் புள்ளமங்கை எனப் பெயர் கொண்டது. (புள் - பறவை)
தேவர்கள் அமிர்தம் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை சிவபெருமான் விழுங்கி திருமிடற்றில் அடக்கிய ஸ்தலம். இதனால் ஆலந்தரித்த ஈஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார்.
தேவாரத் திருத்தலம்.