'வேணு' என்றால் மூங்கில். மூங்கில்கள் மிகுந்து காணப்பட்ட வனமாக இருந்தமையால், இது வேணுவனம் எனப்பட்டது.
வேடுவனாக வந்த இறைவன் போரிட்டதால், 'வேட்களம்' என்றாயிற்று.
ஸ்ரீ கிருஷ்ணரின் யோசனைப்படி, சிவபெருமானிடமிருந்து பாசுபத அஸ்திரத்தைப் பெறுவதற்காக, இங்குள்ள மூங்கில்வனத்தில் அர்ஜுணன் தவமிருக்கின்றான். தவத்தைக் கலைக்க, மூகாசூரனை பன்றி உருவில் அனுப்புகின்றான் துரியோதனன்.
வேடுவன்-வேடுவச்சி கோலத்தில் சிவபெருமானும் பார்வதியும் அர்ஜுணனுக்கு உதவ வருகின்றனர்.
வேடன் வடிவிலிருந்த சிவபெருமான் எய்த அம்பும், அர்ஜுணன் எய்த அம்பும் ஒரே சமயத்தில் பன்றியைத் தைத்தது. பன்றி இறந்தது தன்னுடைய அம்பினால்தான் என்று இருவரும் தர்க்கம் செய்து, பின்னர் விற்போர் புரிந்தனர். அர்ஜுணனின் வில் உடைந்தது. உடைந்த வில்லால் வேடன் தலையில் ஓங்கி அடிக்கின்றான் அர்ஜுணன்.
பின்னர் வந்திருப்பது இறைவனே எனப் புரிந்துகொண்ட அர்ஜுணன், பிழையை மன்னித்தருளுமாறு வேண்டி, பாததீட்சை பெற்று, பாசுபதாஸ்திரம் பெறுகிறான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
பினாகம், சாரங்கம், காண்டீபம் ஆகிய மூன்று பிரசித்தி பெற்ற விற்களும் தோன்றிய இடம் இது.
பன்றியை உசுப்பி அர்ஜுணனின் தவத்தைக் கலைத்த 'உசுப்பூர்' எனும் இடம் அருகாமையில் உள்ளது.