மூலவர்: பால்வண்ண நாதேஸ்வரர், அம்பாள்: வேத நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக பால்வண்ண நாதேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இது ஒரு சுயம்பு மூர்த்தம். சிரசின் நடுவே ஒரு பள்ளத்துடன் காணப்படும் அமுதலிங்கம். பால்நிற வெண்மணலுடன், பலவிதமான மூலிகைகளைக் கொண்டு கபிலமுனி சித்தரால் உருவாக்கப்பட்ட லிங்கம் இது. அபிஷேகம் செய்தால் பால் மட்டும் லிங்கத்தில் தங்கும். மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே செய்யப்படும். தும்பைப்பூ அர்ச்சனை இவருக்கு மிகவும் பிரியமானது.
மூலவரின் பின்புறமாக, உமையவளுடன் கூடிய சந்திரசேகரரின் அழகிய திருமேனியை தரிசிக்கலாம். சிவ-பார்வதி திருமணக் கோலம் மிகவும் அழகாக இருக்கின்றது.
பிள்ளையார், விஜய விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய முருகன், அகோர மூர்த்தி, புவனேஸ்வரி ஆகிய மூர்த்தங்களையும் இங்கு தரிசிக்கலாம். மிகப் பெரிய நந்தியம் பெருமான் மற்றும் உற்சவ மூர்த்தங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன.
இங்குள்ள சதுராக்னி துர்க்கை மிகுந்த வரப்பிரசாதி என்பர். மனக்குழப்பம், கவலை, படபடப்பு ஆகியவற்றை நீக்கி அருள்புரிகின்றாள். சுயம்பிரபை தேவியுடன் அதிகார நந்தி காட்சி தருகின்றார்.
விசேஷ மூர்த்தமாக எழுந்தருளியுள்ள காலபைரவர் இங்கு பிரசித்தமானவர். இவருக்கு நாய் வாகனம் இல்லை. 27 மண்டை ஓடுகளுடன் பூணூல், சர்ப்ப அரைஞாண் கயிறு அணிந்து, காசியிலிருப்பது போலவே ஜடாமுடியுடன் காணப்படுகின்றார். தேய்பிறை அஷ்டமி தினங்களில் இவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.