ஸ்ரீ பஞ்சமுக ஹேரம்ப கணபதி மிகப் பெரிய ஆகிருதியுடன் கம்பீரமாக தரிசனம் தருகின்றார். 12 அடி உயரம் கொண்ட அழகான திருவுருவம். ஐந்து திருமுகங்களும், பத்து திருக்கரங்களும் கொண்டுள்ளார். முதலில் இவரை தரிசித்து ஆசி பெற்று ஆலயத்துள் செல்கிறோம்.
மஹா மண்டபத்தின் மத்தியில் ஸ்ரீ மஹா மேருவும் ஆறு சந்நிதிகளும் அமைந்துள்ளன. ஸ்ரீ கமல சித்தி விநாயகர் தாமரை மலரில் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். மாம்பழம், பூ, கரும்பு, பரசு ஏந்திய சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி.
ஸ்ரீ மாதா புவனேஸ்வரி சர்வாலங்கார பூஷிதையாக அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள். ஆறடி உயரம் கொண்ட அழகான திருவுருவம். வலச்சுற்றில் - திரிபுர பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகுளாமுகி, ராஜ மாதங்கி, கமலாத்மிகா, காளி, தாரா வித்யா, ஸ்ரீ வித்யா ஆகியோரின் சுதை வடிவங்களைக் காணலாம்.
ஸ்ரீ சக்கர மஹா மேருவை தரிசிக்கலாம்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்வாமிநாத ஸ்வாமி எழுந்தருளியுள்ளார். பன்னிரெண்டு அடி உயரம் கொண்ட அழகான நெடிதுயர்ந்த திருமேனி கொண்டு தரிசனம் தருகின்றார்.
எட்டடி உயரம் கொண்ட திருமேனியுடன் காட்சி தரும் வீர சரபேஸ்வரரும், பன்னிரெண்டு அடி உயரம் கொண்டு பஞ்சலோகத் திருமேனியாக காட்சி தரும் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவியும் சாந்நித்யம் மிக்க சந்நிதிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர், ஸ்ரீ சுதர்ஸனரும் - லட்சுமி நரசிம்மர், ஐயப்ப ஸ்வாமி, சனீஸ்வர பகவான், அஷ்டாதசபுஜ துர்க்கா பரமேஸ்வரி, தத்தாத்ரேயர் என அனேக மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். எல்லாமே உயரமாகவும், பெரிய திருவுருவங்களாகவும், கம்பீரமாகவும் ஸ்தாபித்துள்ளனர்.
மஹா சஹஸ்ரலிங்க மூர்த்தி (1008 லிங்கம்), நந்திகேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கும்போது ஓர் அதிர்வு ஏற்படுகிறது.