அம்மனின் தீவிர பக்தை ஒருவர், நெல் வியாபாரம் செய்து வருபவர். இவரது கடை வாசலில் நின்று கொண்டு, ஒரு பெண்மணி நெல் வேண்டுமெனக் கேட்டாள். நெல்லை அளந்து அவளது கூடையில் போட்டு விட்டு, காசு வாங்க நிமிர்ந்து பார்த்தால், அந்த பெண்மணியைக் காணவில்லை. அன்றிரவு கடைக்காரியின் கனவில் தோன்றிய அதே பெண்மணி, தான் வேப்ப மரத்தடியில் புற்று உருவமாக இருப்பதாகத் தெரிவித்தாள். உடனே அந்த புற்றைக் கண்டுபிடித்து, அதற்கு மஞ்சள் பூசி பூஜித்து வந்தனர். பின்னர் செப்பு படிமம் செய்து பூஜிக்கலாயினர். நெல்லுக்கடை வியாபாரியால் பூஜிக்கப்பட்டு வருவதால் நெல்லுக்கடை மாரியம்மன் என்று அழைக்கப்படுகின்றாள்.
ஆண்டுதோறும் நடைபெறும் செடில் உற்சவம் பிரசித்தி பெற்றது. உயரமான கம்பம் ஒன்று நடப்பட்டு, அதன் குறுக்கு வாக்கில் ஒரு கம்பம் பொருத்தப்பட்டு, அதன் முனையில் ஒரு ராட்டின அமைப்பு போன்ற தொட்டில் வைக்கப்பட்டு இருக்கும். ராட்டின அமைப்பு தொட்டிலில், காத்தவராயன் வேஷத்தில் கோவில் பூசாரி நின்று கொண்டு இருப்பார்.
உடுக்கை, பம்பை மற்றும் பல வாத்தியங்கள் முழங்க, ராட்டினம் சுற்றி வரும். ராட்டினம் தாழ வரும்போது, ஒவ்வொரு குழந்தையாக பூசாரியிடம் தருவார்கள். பூசாரி அக்குழந்தையுடன் மேலெழும்பி ஒரு சுற்று சுற்றிவிட்டு, கீழிறங்கியதும் குழந்தையைத் தருவார். பின் இதே முறையில் அடுத்தடுத்து குழந்தைகள். இதற்கு செடில் சுற்றுதல் எனப் பெயர். இம்முறையைப் பின்பற்றுவதால், குழந்தைகளுக்கு, நோய்கள் ஏதும் வராமல் மாரியம்மன் பார்த்துக் கொள்வார் என ஐதீகம்.
மர ராட்டினத்தின் உச்சியில், உடல் நலமில்லாத குழந்தைகளை வைத்து மூன்று முறை சுற்றுவார்கள். இந்த செடில் சுற்றுதலுக்கு பணம் கட்டிவிட்டு, சீட்டு வாங்கிக் கொண்டு 2-3 நாட்கள் காத்திருக்க நேரிடும். வைகாசி மாத கடைசி ஞாயிறன்று விடிய விடிய செடில் சுற்றுவார்களாம்.