ஸ்தல வரலாறு
ஹிரண்ய வதம் முடித்து உக்ரமாக இருந்த நரசிம்மரை சாந்தப்படுத்த மஹாலட்சுமியை வேண்டி நின்ற தேவர்களுக்காக தேவி இங்கு வந்ததாகவும், தேவியின் வேண்டுகோளுக்கிணங்க நரசிம்மர் இங்கு எழுந்தருளியுள்ளார் என்றும் ஸ்தல புராணம் கூறுகிறது.
நரசிம்ம அவதாரத்தின் அவசியத்தை இங்கு மும்மூர்த்திகள் கூடி விவாதிப்பதாக ஐதீகம். தேவதச்சனான விஸ்வகர்மா ஸ்ரீ ரங்கநாதரை வழிபட்டு அவருக்கு இங்கு கோயில் எழுப்பும் கைங்கர்யத்தை செய்தான் என்றும் ஸ்தல புராணம் மேலும் கூறுகிறது.
நாமக்கல் - ஸ்தல வரலாறு
ராம - ராவண யுத்தம் நிகழ்ந்த காலத்தில், இந்திரஜித்தின் மாயையால் மூர்ச்சையடைந்த லக்ஷ்மணனின் மூர்ச்சையை தெளிவிக்க, சஞ்சீவி மலையை எடுத்து வரச் செல்கிறார் ஹனுமார்.
சஞ்சீவி பர்வதத்துடன் வந்து வானர வீரர்களையும், லக்ஷ்மணனையும் மூர்ச்சை தெளிவித்துவிட்டு, மலையை வைத்து விட்டு திரும்புகையில் வழியில் ஓடிக் கொண்டிருந்த கண்டகி நதியில் கிடைத்த அற்புதமான சாளக்ராம கல்லை எடுத்துக் கொண்டார் ஹனுமார்.
இத்தலத்திலுள்ள கமலாலய குளத்தைக் கண்டதும், சிரமப் பரிகாரம் செய்து கொள்ள இங்கு தங்கினார்.
ஆதியில் இங்குள்ள தபோவனத்து குளக்கரையில் மஹாலட்சுமி அமர்ந்து சௌம்ய நாராயணனை நோக்கி தவம் மேற்கொண்டிருந்தாள். கமலாசினி தவமிருந்த குளக்கரை என்பதாலும், தாமரை மலர்கள் நிறைந்த குளம் என்பதாலும், இக் குளம் கமலாலயம் எனப் பெயருற்றது.
இதைக் கண்ணுற்ற ஹனுமன், சாளக்ராமக் கல்லைக் கீழே வைத்து விட்டு மஹாலட்சுமியை சேவிக்க சென்றார். குளத்தருகே ஹனுமனின் காலடி காணப்படுகிறது.
ஹனுமன் திரும்பி வந்து சாளக்ராம கல்லை எடுக்க முயற்சித்து தோல்வியுற்றார். கீழே வைக்கப்பட்ட சாளக்ராமக் கல் பெரிய மலையாக வளர்ந்துவிட்டது. அதுவே நாமக்கல் மலை. நான் இங்கேயே கோயில் கொள்ளப் போகிறேன் - என்னை தியானித்து நீயும் இங்கேயே இரு என பகவான் கூற, ஹனுமனும் இங்கேயே கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு.
பரம்பொருளே மலையாக இருப்பதால், இங்கு தனக்கு விதானம் அமைக்க ஆஞ்சநேயர் உத்தரவு தரவில்லை எனக் கூறப்படுகிறது.