மூலவர்: நாகேஸ்வரர், அம்பாள்: பெரிய நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் நாகேஸ்வரர். மிகப் பிரகாசமாக காட்சி தரும் ஜோதி வடிவான லிங்கம். கருவறை தாழ்வான இடத்தில் அமைந்துள்ளது. சித்திரை மாதத்தின் 11, 12, 13 தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.
ஆதிசேஷன் பூஜித்த இறைவன் என்பதால் நாகேஸ்வரர் என்றும், வில்வத்திலிருந்து தோன்றியதால் வில்வவனேஸ்வரர் என்றும், பாதாளத்திலிருப்பதால் பாதாள லிங்கேசர் என்றும் போற்றப்படுகிறார். மடந்தைபாகர் என்ற திருநாமமும் உண்டு.
மூலஸ்தானத்தருகே உள்ள முன் மண்டபத்தின் தெற்கு மூலையில் சந்நிதி கொண்டுள்ள கங்கை விநாயகர் அவசியம் தரிசிக்க வேண்டியவர். தந்தம், லட்டு, அட்ச மாலை, கதாயுதம் கொண்ட சதுர்புஜங்களுடனும், லட்டு உருண்டைகளைப் பற்றியுள்ள இடம்புரி துதிக்கையுடனும், பத்ம பீடத்தில் நின்றவாறும் காட்சி தரும் அழகிய கங்கை கணபதியின் திருவுருவத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அழகிய வேலைப்பாடுகளை உடைய கல் திருவாசி கண்ணைக் கவரும் விதத்திலுள்ளது. ராஜேந்திர சோழன் வங்காளத்திலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ததாக குறிப்பொன்று கூறுகிறது.
உச்சிஷ்ட கணபதியின் திருவுருவம் அழகாக இருக்கின்றது.
கோவிலுக்குள் நுழைந்ததும் வலப்புறமாக உள்ள சந்நிதியில் அம்பாள் பெரிய நாயகி எனப்படும் பிரஹந்நாயகி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.
சூரிய பகவான் தனி சந்நிதி கொண்டுள்ளார். சிதாரி எனும் தூபமும், சாம்பிராணி குங்கிலியம் ஆகியனவும் காண்பித்து வழிபடுகின்றனர். தேர்சக்கரத்துடன் கூடிய மண்டபத்தின் ஆரக்கால்களில் துவாதச (12) ஆதித்யர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நடராஜர் பேரம்பலம் உயரமான இடத்தில் தேர் போன்று உள்ளது. இரண்டு பெரிய கற்சக்கரங்கள். அதில் 12 ராசிகளின் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இரண்டு குதிரைகள், நான்கு யானைகள், பாகர்கள் இழுத்துச் செல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.
எதிரேயுள்ள நடராஜர் மண்டபத்தின் மேற்கூரை, தேரின் விமானம் போல மரத்தால் உருவானது. நடராஜப் பெருமான் தாண்டவ கோலத்தில் கிழக்குப் பார்த்து எழுந்தருளி உள்ளார். இவரின் நடனத்திற்கேற்ப தாளம் போடும் வகையில் சிவகாமியம்மை கையில் தாளத்துடன் காணப்படுகிறார்.
எதிர்புறமாக ஊர்த்துவ தாண்டவர், உட்பிரகாரத்தில் பிரளய கால ருத்ரர் போன்ற அரிய சிற்பங்கள். பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டும் அழகுடன் உள்ளன. நாகராஜரின் திருவுருவம் காணலாம்.
விமானத்தில் காணப்படும் செல்வப்பிரான் எனும் உமாமகேஸ்வரர் சிற்பம் எழிலானது.
ஆதிசேஷன் சிவராத்திரியன்று இவ்விறைவனை முதல் ஜாமத்தில் வழிபட்டுள்ளார். எனவே இங்கு காலை நேர தரிசனம் சிறந்ததாக கருதப்படுகிறது.
கோபுர வாசல் தாண்டியதும் இடதுபுறமாக நாகதீர்த்தம் உள்ளது. சிங்க வாயில் கொண்டுள்ளதால் சிங்க தீர்த்தம் என்பர். படிக்கட்டுக்களுடன் கூடிய சிறிய கேணி.
வீரமாகாளி எனப்படும் வடபத்ரகாளி சந்நிதி வெளியே இருக்கிறது. ஜ்வர விநாயகர் கோவிலொன்றும் இவ்வூரில் உள்ளது.