தேவர்களின் சாதுர்யத்தாலும், மோகினியின் சூழ்ச்சியாலும், அமிர்தம் பெற முடியாமல் போன அசுரர்கள், அமிர்தம் கடைய கயிறாக பயன்படுத்திய வாசுகியை, சிதைத்து சுருட்டி தூக்கி வீசினார்கள். மூங்கில்காடாக இருந்த இந்த ஸ்தலத்தில் வந்து விழுந்த வாசுகி, நைந்து உயிர் போகும் நிலையிலிருந்தது. அப்பாம்பின் வாலிலிருந்து உயிர், கொஞ்சம் கொஞ்சமாக தலைக்கேறி பிழைத்துக் கொண்டது.
பாற்கடலை கடையும்போது, தன்னால் கக்கப்பட்ட விஷத்தை, சிவபெருமான் உண்ணும்படி ஆயிற்றே, என வருந்திய வாசுகி, இத்தலத்தில் கடுந்தவம் புரிந்து சிவபெருமானை வழிபட்டது. தவத்தினால் மகிழ்ந்து பிரத்யட்சமான சிவபெருமானிடம், நடந்த தவற்றிற்கு தன்னை மன்னிக்கும்படி வேண்டியது. பின்னர் தனக்கு காட்சி தந்தது போல், இங்கேயே எழுந்தருளி அனைவரையும் ரட்சிக்குமாறு வேண்டியது.
தேவர்கள் ஒரு புறம், அசுரர்கள் மறு புறம் என நிற்க, மோகினி வடிவிலுள்ள மகாவிஷ்ணு, அமிர்தத்தை பங்கிட்டுக் கொடுக்கும் பணியை ஏற்றார். முதலில் தேவர்களுக்கு கொடுத்து விட்டு, அடுத்தபடியாக அசுரர்களுக்கு அமிர்தத்தை வழங்குவதாக கூறிய மோகினி, தேவர்களுக்கு வாரி வாரி வழங்கலானார்.
மோகினியின் செய்கையில் தலையிடுவதில்லை என்று அசுரர்கள் உறுதி அளித்திருந்தனர். கட்டுப்பாட்டின் வழி செயல்பட்டால், தங்களுக்கு காலி பாத்திரம்தான் கிடைக்கும் என நினைத்த அசுரன் ஒருவன், தேவகுமாரனைப் போல் வடிவம் கொண்டு, தேவர்களின் மத்தியில் போய் நின்று கொண்டு, அமிர்தம் வாங்கி உண்டான். சூரிய-சந்திரர்கள் - அவனை அசுரன் என அடையாளம் காட்டினர். உடனே மோகினி தனது கையிலிருந்த அகப்பையால் தலையில் ஓங்கி அடித்தாள். அசுரனின் தலை வேறு உடல் வேறு என இரு துண்டுகளாயின.
அமிர்தம் உண்டதால் மரணம் சம்பவிக்கவில்லை. உடல் அசுர வடிவில் இருக்க தலை பாம்பாகிவிட்டது.
இதுவே கேது பிறந்த கதை. பின்னர் பிரம்மனை வழிபட்டு, நவக்ரஹ பரிபாலனத்தில் இடம் பெற்றது.
நவக்ரஹ ஸ்தலங்களுள் ஒன்று - கேது ஸ்தலம்.